கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


கோவை - பாலக்காடு சாலையில் உள்ள சுகுணாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சில மாணவிகள் இது தொடர்பாக தங்களின் பெற்றோர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று காலை 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




அப்போது உடற்கல்வி ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை எனக்கூறி, அவர் குறித்து பள்ளி நிர்வாகம் எவ்வித பதிலும் கூறாமல் இருக்கவே, போராட்டம் தீவிரம் அடைந்தது. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு மற்றும்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ மற்றும் காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்டோர் விரைந்து சென்று பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். 




விசாரணையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியர் பிரபாகரன் கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளியில் இருந்து கடந்த வாரம் மாறுதலாகி சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததாகவும், வந்த சில தினங்களிலேயே பல மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதோடு, பாலியல் தொடர்பாக மாணவிகளிடம் பேசியதும் தெரிய வந்தது. மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் இப்பிரச்சனை குறித்து வெளியே கூற வேண்டாம் என கூறியதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். ஆசிரியர் பிரபாகரன் மற்றும் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




பின்னர் பெற்றோர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பிரபாகரன் பணியினை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவர் கைது கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்தனர். மேலும் அடுத்த சில நிமிடங்களில் கோவை சரவணம்பட்டி பகுதியில் வைத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார் என காவல் துறையினர் தெரிவிக்கவே சமாதானம் அடைந்த பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியானதையடுத்து காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் பள்ளிக்கு இன்று விடுப்பும் அறிவிக்கப்பட்டதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக சுகுணாபுரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண