கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கல்பனா பதவியேற்ற போது எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர், பேருந்தில் சென்னை சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தவர் ஆகிய நேர்மறையான அவரது பிம்பங்கள், மேயராக பதவியேற்ற பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது. மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டது, மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் இணக்கமாக இல்லாமல் மோதல் போக்குடன் செயல்பட்டது, நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் சந்தை வசூல் செய்தது, ஒப்பந்ததாரர்களிடம் கமிசன் கேட்டது, பக்கத்து வீட்டை பெண்ணை காலி செய்ய தொல்லை கொடுத்தது என அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கினார். இதன் காரணமாக அவரை ராஜினாமா செய்ய கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதனையடுத்து உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.


வேட்பாளராக தேர்வான ரங்கநாயகி


காலியாக உள்ள திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 6 ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கணபதி பகுதியை சேர்ந்த 29 வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.




பின்னர் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் பேசும் போது, “கோவை மேயர் வேட்பாளராக ரங்கநாயகியை முதல்வர் அறிவித்துள்ளார். நாளை மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கும். கோவை மாநகராட்சிக்கு தேவையான நிதி அனைத்தும் வழங்கப்பட்டு, சாலைகள் போடப்பட்டு வருகிறது. பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 60 வார்டுகளில் 24 மணி நேரம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் வெள்ளம் வராத அளவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறோம். அடிப்படைத் தேவைகளை செய்திருக்கிறோம். இனியும் செய்வோம்.


கண்ணீரோடு வெளியேறிய மீனாலோகு


கவுன்சிலர்கள் யாரையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யவில்லை. நீங்களாக கிளப்பி விடாதீர்கள். நாளை முறைப்படி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்து நடைபெறும். யாரையும் துணி எல்லாம் எடுத்து வர சொல்லவில்லை. அரசு தீட்டுகின்ற திட்டங்களை, உள்ளூர் மக்களின் தேவை அறிந்து மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் செயல் பட வேண்டும். கடந்த கூட்டத்தில் 303 தீர்மானங்கள் தான் நிறைவேற்றப்பட்டது. அவசியத்தை கருத்தில் கொண்டு தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது” எனத் தெரிவித்தார்.


இதையடுத்து கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவராக உள்ள மீனா லோகு கூட்டத்தில் இருந்து வெளியேறிய போது, கண்ணீர் மல்க சென்றார். மேயர் வாய்ப்பு கிடைக்கும் என மீனாலோகு எதிர்பார்த்து இருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தார். இதனால் கண்ணீர் மல்க காரில் புறப்பட்டு சென்றார். நாளை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.