கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், ஒரே நேரத்தில் 333 தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். சாதாரணக் கூட்டத்திற்கு முதல் நாள் 200க்கும் மேற்பட்ட தீர்மானங்களை அனுப்பினால், அதை படிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லை என துணை மேயரிடம் முறையிட்டார். அப்போது திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாமன்ற கூட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.


இதனை தொடர்ந்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று பொன்னான ஆட்சி நடத்திவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் சிறப்பு தீ்ர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனைதொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் 333 தீர்மானங்களும்  நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக கேரள மாநிலம் சிறுவாணி அணையில் இருந்து தினமும் நீர்கசிவு ஏற்பட்டு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறுவது ஆணையாளர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்து இருப்பதாகவும், இந்த நீர் கசிவினை சரி செய்ய தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் மூலம் வழிமுறைகளை தேர்வு செய்ய 17 லட்சம் ஆய்வு கட்டணம் மாநகராட்சி பொது நிதியில் இருந்து வழங்கவும், கசிவை சரி செய்ய உத்தேச செலவு 3 கோடி ரூபாயினை நகராட்சி நிர்வாக இயக்குநர் மூலமாக அரசு நிதியுதவி பெற்று செயல்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




அதிமுக ஆர்ப்பாட்டம்


கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைய இருக்கும் நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓண்டிபுதூர் பகுதியில் உள்ள 20.72 ஏக்கர் அரசு புறம்போக்கு - திறந்த வெளி சிறைச்சாலை என்ற வகைப்பாட்டில் இருக்கும் நிலத்தை, சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பொருட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு நிலமாறுதல் செய்தும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 6.4.24 ம் தேதி முதல் 17-4-24 ம் தேதி வரை கட்டுகடங்காமல்  தீப்பற்றிய நிலையில், இந்த தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து மாமன்றத்தின் பார்ரவைக்கு ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது. மொத்தம் செலவு 76,70,318 காட்டப்பட்டது. இதில் உணவு, டீ, காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்க்கு மட்டும் 27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டது. இதை ஏற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நேரத்தில் 333 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் எண்களை சொல்லி மொத்தம், மொத்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதற்கு முன்னதாக வீடு கட்டுவதற்கு ஆன்லைன் அப்ரூவல் பெறும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்த அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், ”ஆன்லைன் ஆப்ரூவல் எனக்கூறி அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது. 110 முதல் 120 சதவீதம் வரை கட்டணம் உயர்வு ஏற்பட்டுள்ளது. 1000 சதுர அடிக்கு வீடு கட்டுபவர்கள் பிளான் அப்ரூவல்க்கு 1.32 லட்சம் கட்டணம், இப்போது 2.30 லட்சமாக உயர்ந்து இருக்கின்றது. தமிழக முதல்வர் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். இன்று 333 தீர்மானம் ஓரே நேரத்தில் கொண்டு வந்திருக்கின்றனர். ஏற்கனவே 100 தீர்மானம் கொடுக்கபட்ட நிலையில், நேற்றிரவு 200 க்கும் மேற்பட்ட தீரமானங்களை கொடுத்து இருக்கின்றனர். இந்த தீர்மானங்களை யாரும் படிக்க கூட வாய்ப்பில்லை, இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடத்து இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.


ALSO READ | EVKS Elangovan Exclusive: கார்த்தி சிதம்பரம் சுயநலவாதி; துரோகம் செய்கிறார்- ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி