கோவை மாநகரின் மையப்பகுதியில் உள்ள காந்திபுரத்தில், மாநகர பேருந்து நிலையம், பிற மாவட்டங்களுக்கு செல்லும் மத்திய பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்து நிலையம் ஆகியவை தனித்தனியாக அமைந்துள்ளனர். கோவை மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


பேருந்துகளுக்கு இடையே சிக்கி பயணி உயிரிழப்பு:


நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது. இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.  இன்று காலை பணிகளுக்கு செல்வதற்காகவும், ஊர்களுக்கு செல்வதற்காகவும் ஏராளமானோர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது காந்திபுரம் - காந்திபார்க் இடையே இயக்கப்படும் 7 என்ற எண்ணிட்ட தனியார் பேருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தது.


இந்த பேருந்தை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஒட்டுநர் திருநாவுக்கரசு என்பவர் இயக்கினார். அப்போது திடீரென திருநாவுக்கரசு கவனக் குறைவாக திடீரென பேருந்தை பின்னோக்கி நகரத்தியதாக கூறப்படுகிறது. இதில் பின்னால் இருந்த பேருந்தை தாண்டிச் செல்ல முயன்ற ஒருவர், இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


மதுபோதையில் ஓட்டுநர்:


இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர் திருநாவுக்கரசை கீழே இறக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்ததால், அவர்கள் அவரை சராமரியாக தாக்கினர். அருகில் இருந்தவர்கள் அதனை தடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர். காட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது, உயிரிழந்தவர் சிவக்குமார் என்பது தெரியவந்தது.


இதையடுத்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பேருந்து நிலையத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்று, பேருந்திற்காக நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : TN Weather Update: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! மற்ற மாவட்டங்களில் என்ன நிலை? வானிலை நிலவரம்