Savukku Sankar : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு ; காரணம் என்ன?

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாக நேதாஜி பேரவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் புகார் அளித்தார்.

Continues below advertisement

பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து அந்த வழக்குகளிலும் அவரை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Continues below advertisement

இதனிடையே மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் சவுக்கு சங்கிற்கான சிகிச்சையை வழங்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டதில் வலது கையில் இரண்டு இடங்கள்ள லேசான கிராக் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்காக மாவு கட்டு போட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


மேலும் ஒரு வழக்குப்பதிவு

இந்த நிலையில் கடந்த 31.10.2023 அன்று ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் நேதாஜி பேரவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில் பந்தய சாலை காவல் நிலையத்தில் 153, 153(A) (1)(a) ,153(A) (1)(b) 504, 505(ll) IPC ACT ஆகிய சட்டப்பிரிவுகளில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் மீது இரண்டாவது வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே திருச்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இதற்கு முன்னதாக கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் கோவை நான்காவது நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவண பாபு அனுமதி வழங்கினார். இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்ததை தொடர்ந்து, சவுக்கு சங்கரை காவல் துறையினர் மீண்டும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவரது நீதிமன்ற காவலை 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

Continues below advertisement