நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயராகவன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் வி3 ஆன்லைன் டிவி என்ற நிறுவனத்தை  தொடங்கினார். இதன் கிளைகளை கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில்  தொடங்கி முதலீடு பெற்ற  நிலையில், திடீரென அந்த நிறுவனத்தை மூடினார். இந்த நிலையில் இவரது நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த சக்தி ஆனந்தன் அதில் இருந்து வெளியே வந்து மை வி3 ஏட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்திற்கான பணிகளை விஜயராகவன் செய்து கொடுத்து வந்துள்ளார். மேலும் விஜயராகவனிடம் இருந்து மூலிகை பொருட்கள், சித்த மருத்துவ மாத்திரைகளையும் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்திற்கு வாங்கி வந்துள்ளனர். இதனிடையே கடந்த மாதம் மைவி3 ஏட்ஸ் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது கோவை மாநகர குற்ற பிரிவு காவல் துறையினர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்வதாக வழக்கு பதிவு செய்தனர்.  

Continues below advertisement

இதற்கிடையே மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜயராகவன் எனவும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து விஜயராகவனை அழைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சித்த மருத்துவம், மூலிகை பொருட்கள் உள்ளிட்டவை தயாரிப்பது தொடர்பான அவரிடம் காவல் துறையினர் கேள்வி எழுப்பி இருந்தனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பாக முனைவர் பட்டம் படித்திருப்பதாகவும் கூறி சான்றிதழ்களை கொடுத்திருந்தார். அவற்றை காவல் துறையினர் ஆய்வு செய்த போது அவை போலியான சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது.

Continues below advertisement

இதனையடுத்து மதுரையில் இன்று அதிகாலை கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயராகவனின் உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது மருத்துவசோதனையில்  தெரிய வந்த நிலையில் அவரை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் மதுரையில் இருந்து  கோவை அழைத்து வந்தனர். விசாரணையில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்திற்கு மருந்து மற்றும் மூலிகை பொருட்களை விஜயராகவன் அனுப்பி வருவதும், ஆனால் முறையான படிப்பு எதுவும் படிக்காமல், அண்ணாமலை பல்கலையில் இயற்கை மருத்துவத்தில் முனைவர் பட்டம் முடித்து இருப்பதாக போலீசாரிடம் தவறான தகவலை தெரிவித்து இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மோசடி உட்பட 4 பிரிவுகளில் மாநகர குற்றபிரிவு  போலீசார் விஜயராகவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயராகவன் 80 க்கும் மேற்பட்ட இயற்கை முலிகை பொருட்கள் மற்றும் மாத்திரைகள் தயாரித்து வரும் நிலையில் மருத்துவதுறை மூலம் அவற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும மாநகர குற்றபிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே போலீஸ் விசாரணையில் தனக்கு சக்கரை நோய் உள்ளது என விஜயராகவன்  காவல் துறையிடம் கூறியதால், காவல் பாதுகாப்புடன் அவரை கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். குருஜி என்று வி3 ஆன்லைன் டிவி மற்றும் மைவி3 ஏட்ஸ் நிறுவன வாடிக்கையாளர்களால் அழைக்கப்படும் விஜயராகவன் காவல துறையினர் பிடியில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது