V3 Online TV : வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என விஜயராகவன் என்பவர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.


இது தொடர்பாக மதுரையில் இருந்த வி3 ஆன்லைன் டிவி உரிமையாளர் விஜயராகவன் என்கிற குருஜியை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். மதுரையில் இருந்த விஜயராகவனை காவல் துறையினர் கைது செய்த போது, நெஞ்சுவலி என தெரிவித்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது விஜயராகவனின் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விஜயராகவனை கைது செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கோவைக்கு அழைத்து வருகின்றனர்


கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஏட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம் மாதம் பணம் வழங்கி வருகிறது.




இதனிடையே மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல அந்நிறுவனம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.


மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் விஜயராகவன்தான் எனவும், பினாமி பெயரில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அவர்கள் புகார் அளித்து இருந்தனர். இதனிடையே மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் குறித்து அவதூறாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.