Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த   டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு   சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கும் நிலையில், கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இணையத்தில் சரமாரியாக டிடிஎஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது.  

Continues below advertisement


இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட டிடிஎஃப் வாசன், தான் பயிற்சி எடுத்துக் கொண்டே இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்பட்ட வீடியோ ஜமுனா ஹைவேஸ் சாலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் அப்பிரச்சனை முடிவுக்கு வந்ததாக நினைத்திருந்த நிலையில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.  


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த மரக்கடை அதிபரும், பிரபல யூட்யூபருமான   ஜி.பி.முத்துவை சந்தித்த டிடிஎப் வாசன், அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டியுள்ளார். தனது வட்டார வழக்கு சொற்களால் வசைபாடும் ஜி.பி.முத்துவை ஆரம்பத்தில் தனக்கு பிடிக்காது என்றும், ஆனால் போகப் போக அவரது சேவை, போராட்டக் குணம் ஆகியவற்றால் பிடித்து விட்டதாகவும் டிடிஎப் வாசன் தெரிவித்தார்.





இதனையடுத்து ரைடுக்கு கிளம்பும் முன் வாசனின் பைக்கை பார்த்து ஜி.பி.முத்து இதில் பிடிமானம் கூட இல்லையே என தெரிவிக்க, என்னை பிடித்துக் கொள்ளுங்கள் என டிடிஎப் வாசன் கூறுகிறார். பின்னர் இருவரும் நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பியதாக தெரிவித்து கன்னத்தில் முத்தமிட்டு கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து 20 கி.மீ. தூரத்தை பைக்கில் செல்ல முடிவு செய்கின்றனர். டிடிஎப்வாசன் பைக்கில் ஏற முடியாமல் ஏறும் ஜி.பி.முத்து தனக்கு வேகமாக போக பிடிக்காது என தெரிவிக்கிறார்.  


ஆனால் அதைக் கேட்காமல் வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் செல்லும் டிடிஎப் வாசன், ஜி.பி.முத்துவுக்கு மரண பயத்தை காட்டுகிறார். இதனால் கதறுவதை காமெடியாக டிடிஎப் வாசன் எடுத்துக் கொள்கிறார். எதிர்திசையில் வாகனங்கள் வரும் நிலையில் கையை விட்டு வேகமாக ஓட்டும் நிலையில் ஜி.பி.முத்து ஹெல்மெட் கூட அணியாமல் பின்னால் அமர்ந்து இருக்கிறார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் இப்படி சாலை விதிகளை மீறும் டிடிஎப் வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.  


இந்த நிலையில் டிடிஎப் வாசன் பிரபல யூடியூபர் ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து கோவை - பாலக்காடு சாலையில் அசுர வேகத்தில் இயக்கி அவருக்கு பயத்தை காட்டிய வீடியோ வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிவேகமாகவு,ம் அஜாக்கிரதையாகவும் மனித உயிர்க்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் வாகனத்தை இயக்கி அதை வீடியோ பதிவு செய்து youtube சேனலில் வெளியிட்டதாக வாசன் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டிடிஎப் வாசன் மீது மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது மற்றும் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுவது ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.