கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் மனைவி கங்காதேவி. அழகு கலை நிபுணரான இவர், அப்பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்நிலையில் கங்காதேவி அழகு நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது கணவர் சீனிவாசன் சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்த போது, அழகு நிலையத்திற்கு வந்த மூன்று நபர்கள், கங்காதேவியின்  கை, கால்களை கட்டி வாயையும் துணியால் கட்டி  அணிந்திருந்த 19 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றாக தெரிவித்துள்ளார். மேலும் 3 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து நேற்று சம்பவம் குறித்து கணவன் , மனைவி இருவரும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற  போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கும் போதே, கங்காதேவி தனது வீட்டிற்கு சென்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பியூட்டி பார்லரில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில்  உள்ள கண்காணிப்பு கேமிராக்களை  போலீசார் ஆய்வு செய்தனர்.




இதனிடையே இந்த வழக்கில் திடீர் திருப்பமாக முத்துப்பாண்டி என்பவரை கைது செய்தனர். முத்துப்பாண்டிக்கும்  கங்காதேவிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்த நிலையில், இருவரும் சேர்ந்து கொள்ளை நாடகமாடி இருப்பதும் தெரியவந்தது. 3 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கணவரிடம் தெரிவித்த நிலையில், கணவர்  வெளியில் சொல்ல மாட்டார் என கங்காதேவி நினைத்துள்ளார். ஆனால் சீனிவாசன் காவல் நிலையத்தில் கட்டாயம் புகார் கொடுத்து ஆக வேண்டும் எனக் கூறி, காவல் நிலையத்திற்கு கங்காதேவியை அழைத்து சென்று புகார் அளித்துள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், விரைவில் சிக்கிக் கொள்வோம் என பயந்த அழகு கலை நிபுணர் கங்காதேவி, வீட்டிற்கு சென்று  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.




மேலும்  கங்காதேவியின் செல்போனிலிருந்து முத்துப்பாண்டியின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பரிமாறிக் இருப்பதும், அடிக்கடி பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஊட்டியில் இருந்த முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்த  போலீசார் அவரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050