’குப்பையை தரம் பிரித்து கொடுங்க, குளு குளு ஊட்டிக்கு சுற்றுலா போங்க’ - அன்னூர் கவுன்சிலரின் அட்டகாசமான திட்டம்

மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களுக்கு தந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஊட்டிக்கு இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

Continues below advertisement

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் அன்னூர் பேரூராட்சிக்கு என குப்பை கிடங்கு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக அன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தினசரி இந்த பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, அவற்றை அகற்றுவது சிரமமாக இருந்து வருகிறது. இந்நிலையில்  இந்த சிக்கலை போக்க கவுன்சிலர் ஒருவர் திடக் கழிவு மேலாண்மைக்காக ஒரு புதிய முயற்சியை தன் பங்கிற்கு துவக்கியுள்ளார்.

Continues below advertisement


அன்னூர் பேரூராட்சியில் தொடர்ந்து 3 முறையாக 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக ரங்கநாதன் வெற்றி பெற்றுள்ளார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் திடக் கழிவு மேலாண்மை குறித்த துன்டு பிரசுரங்கள் வழங்கி, திடக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் ‘குப்பைக்கு வெகுமதி, குளு குளு சுற்றுலா’ என்ற பெயரில் ஏப்ரல் 14 முதல் ஜீன் 1 ம் தேதி வரை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களுக்கு தந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஊட்டிக்கு இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.


இது குறித்து ரங்கநாதன் கூறுகையில், ”அன்னூர் பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரிப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. இதனைப் போக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 12 வது வார்டில் வசிக்கும் மக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வீடுகளுக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்கினால், அதனை ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை கணக்கிட்டு  சரியான முறையில் குப்பைகளை வழங்கும் பொது மக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவார்கள்.


அவர்கள்  குளு குளு ஊட்டிக்கு ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று எனது ஏற்பாட்டில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவித்தார். மக்கும் குப்பைகளை கொண்டு மாடி தோட்டம் அமைத்து தற்சார்பு முறையில் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மாடி தோட்டம் குறித்தும் மக்களிடையே பேசி வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.


இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”வார்டு கவுன்சிலர் அறிவித்துள்ள இந்த திட்டம் வரவேற்க தக்கது. இதன் மூலம் தூய்மை பணியாளர்களின் பணி சுமை குறையும். வீட்டிலேயே உள்ள தங்களுக்கு ஊட்டி சுற்றுலா அறிவிப்பு தங்களுக்கு வெளியே செல்லும் வாய்ப்பாக அமையும்” எனக் கூறினர். திடக்கழிவு மேலாண்மை குறித்த இந்த முயற்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola