கோவை மாநகராட்சி மாமன்றத்தின் முதல் சாதாரண கூட்டம், டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாமன்ற கூட்டத்திற்கு வந்த 9 காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள், உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக சைக்கிளில் வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதே போல் மாமன்ற கூட்டத்திற்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், பார்த்திபன் ஆகியோர் சொத்து வரி உயர்வை கண்டித்து கருப்பு உடை அணிந்து மாமன்ற கூட்டத்திற்கு வந்தனர். 




இதையடுத்து மேயர் கல்பனா தலைமையில் துவங்கிய கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச் செல்வன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முதல் மாமன்ற சாதாரன கூட்டத்தில் சொத்து வரி குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என திமுக உறுப்பினர்கள் உட்பட அனைவரும் வலியுறுத்தினர். இதையடுத்து மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் குப்பைகளை எடுக்க வரும் லாரிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி பேசும் போது, அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம், மற்றும் பூங்கா பராமரிப்பில் பல்வேறு ஊழல் நடந்துள்ளதாகவும், அவற்றை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக உறுப்பினர் பிரபாகரன் மண்டல தலைவர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றார். இதனால் திமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர் குரல் எழுப்பியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 




இதை தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும், ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதே போல் கோவை மாநகராட்சியிலும் வார்டுக்கு ரூ.35 லட்சம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா கூறும் போது: கோவை மாநகராட்சி 1997 சட்டப்படி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய மட்டுமே சட்ட விதிமுறை உள்ளது என தெரிவித்தார். அவ்வாறு வார்டுக்கு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றால் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை தமிழக அரசுக்கு அனுப்பலாம். இது குறித்து அரசு தான் முடிவு எடுக்க முடியும் என தெரிவித்தார். அதே போல் மீண்டும் எழுந்து பேசிய கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் தொகுதிகளுக்கு வருவது இல்லை. இதனால் தான் குடிநீ்ர  சாக்கடை பிரச்சனை நிழவி வருகிறது. அவர்கள் இது குறித்து அவர்கள் ஏதும் கண்டுகொள்வதில்லை என தெரிவித்தார். இதனால் மீண்டும் அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


தொடர்ந்து விவாதம் நடைபெற்ற போது சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியதோடு, தீர்மான நகலையும் கிழித்து எறிந்தனர். அப்போது கோவை மக்களை வஞ்சிக்க கூடாது எனக் கூறி முழக்கங்களை எழுப்பிதால் திமுக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக உறுப்பினர் பாபு என்பவர் அதிமுக கவுன்சிலர் பிரபகரனை தள்ளிவிட்டதால் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து சக உறுப்பினர் அவர்களை சமாதானப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றனர். இதையடுத்து கூட்டத்தை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 




அப்போது செய்தியாளர்களிடம் கூறும் போது, ”100 சதவீத சொத்து வரியை கொண்டு வந்ததை கண்டித்து கேள்வி எழுப்பியதற்கு தாக்க முற்பட்டனர். இது தான் திராவிட மாடலா? இந்த வரி வசூலை திமுக உறுப்பினர்கள் நியாப்படுத்தி பேசுகிறார்கள். இந்த ஆண்டு கோவை மாநகராட்சி 350 கோடி வசூல் செய்துள்ளது. தனியார் நிதி நிறுவனம் போல நடந்து கொண்டனர். மக்கள் மீது வரி திணிப்பு செய்துள்ளனர். வாக்களித்த மக்களுக்காக தாங்கள் மாமன்ற கூட்டத்தில் குரல் கொடுத்தோம். இப்போதும் மக்களுக்கான இயக்கமாக அதிமுக செயல்பட்டு வருகிறது காலஅவகாசம் அளிக்காமல் இப்படி வரியை உடனடியாக ஏற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தனர்.


இதனிடையே சொத்து வரி தீர்மான நகலை கிழித்தெறிந்த அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் 2 மாமன்ற கூட்டங்களுக்கு பங்கேற்க தடை விதித்து மாநகராட்சி மேயர் கல்பனா உத்தரவிட்டார்.