ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் 37 வயதான பெண். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், குழந்தை இல்லை. இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த அப்பெண், பவானியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர் பவானியில் உள்ள சிமெண்ட் மற்றும் டைல்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.


இந்நிலையில் கடந்த 29 ம் தேதியன்று கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அவர் வேலை பார்க்கும் கடையின் உரிமையாளர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள குளியலறைக்கு சென்ற அவர், அங்கிருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். வலியால் துடித்த அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இச்சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி மற்றும் உடல் நல கோளாறால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதிய பணம் இல்லாததால் மருத்துவச் செலவிற்கு கடை உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்ததால் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


இதனிடையே தற்கொலை காரணம் குறித்து அப்பெண் பேசும் வீடியோ பதிவு மற்றும் எழுதிய கடிதம் ஆகியவை வெளியாகியுள்ளது. அதில், ”எனக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. என் கணவரை பிரிந்து எனது அம்மா வீட்டில் வசித்து வருகின்றேன். நான் கடந்த 11 வருடங்களாக விநாயகா செராமிக்ஸ் என்ற சிமெண்ட் அண்ட் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறேன். கடை உரிமையாளர் நவநீதன் என் குடும்ப சூழலை பயன்படுத்தி என்னை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்தார். அவர் மனைவி அகிலாவுக்கு தெரியும். ஆனால் அவர்கள் கணவரை கண்டிக்கவில்லை. அவர்களுக்கு குழந்தை இல்லை. 


என்னிடம் உல்லாச வாழ்க்கையை அனுபவித்து விட்டு என்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி என் மேல் பெட்ரோல் ஊற்றி கொன்று விடுவேன் என்றும், என்னை அவர்கள் குடும்பத்தில் உள்ள அவரின் உறவினர்கள் நவநீதன், அகிலா, சாய் சர்மிளா, சாய் கிருத்திகா எல்லோரும் என்னை மிரட்டுகிறார்கள். என் வறுமையின் காரணமாக வேலைக்கு போனேன். இந்த மாதிரி காமவெறி கொண்ட பல முதலாளிகள் இருக்கிறார்கள் என்னைப்போல் அப்பாவி பெண்கள் வாழ்க்கையில் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். எனக்கு ஆறு முறை கருகலைப்பு  நடந்து இருக்கிறது. அதற்கு காரணம் நவநீதன், அகிலா.


”என் மரணத்திற்கு காரணம் இவர்கள் நான்கு பேர் மட்டும்தான் என் குடும்பத்திற்கு எதுவும் தெரியாது. அவர்கள் பணம் பலம் உள்ளவர்கள் எனக்கு நியாயம் கிடைக்கவேண்டும். இனிமேல் அப்பாவிகள் இழக்கக்கூடாது. கடைசியாக நானே இறக்க  வேண்டுகிறேன் என் மரணத்திற்கு அவர்கள் நான்கு பேர் மட்டும் என்னை எப்போது வேண்டுமென்றாலும் கொன்றுவிடுவார்கள் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுநாள் வரைக்கும் எனக்கு எந்த உதவியும் அவர்கள் செய்யவில்லை. பொய் சொன்னால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். இது நான் கடைசியாக எழுதும் என் வாக்குமூலம்” என கடிதம் எழுதியுள்ளார். இதேபோல தற்கொலைக்கான காரணம் குறித்து வீடியோ பதிவும் செய்துள்ளனர்.


இதையடுத்து அப்பெண்ணின் வீடியோ மற்றும் கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது  வழக்குப் பதிவு செய்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.