வெளியூர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளை மதுரவாயல் வழியாக இயக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து கிளை மேலாளர்களுக்கும்  அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


சுற்றறிக்கை விவரம்:


அரசின் இந்த அறிக்கையில், அனைத்து ஊர்களில் இருந்தும் சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு வரும்போது, தாம்பரம்  மாநகர பேருந்து நிறுத்தம்  அருகே இடதுபுறமாக  நிறுத்தி பயணிகளை  இறக்கிவிடலாம் எனவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவார்கள் என்பதால் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு மேல்  பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக  கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும்” எனவும், அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, காலை வேளைகளில்  வெளியூர் பேருந்துகள்  தாம்பரம் வழியாக  வருவதற்கு பதிலாக, மதுரவாயல் மார்க்கமாக கோயம்பேட்டிற்கு இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


போக்குவரத்து நெரிசல்:


பொதுவாக வெளியூர்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகள், தாம்பரம் - கிண்டி வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் - மதுரவாயல் வழியாகவும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்கின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதை தவிர்க்க தாம்பரம் மார்கத்தை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதனால் நேர மிச்சம் என்றாலும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,கிண்டி, அசோக்பில்லர் மற்றும் வடபழனி பகுதிகளில் இறங்க வேண்டிய பயணிகள் நேரடியாக கோயம்பேடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். பின்பு இணைப்பு பேருந்து மூலமே அவர்கள், தங்களது பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பயணிகளுக்கு கூடுதல் பயணம் நேரம், தூரம் மற்றும் செலவு போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்கு முடிவு கட்டும் வகையில் தான், காலை வேளையில் வெளியூர் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.