நேற்று முதல் மின்விளக்கு வெளிச்சத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலை இரவு நேரத்தில் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து மிளிரும் விளக்கு வெளிச்சத்தில் குடும்பம், குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்


மின்விளக்குகளால் ஜொலிக்கும் மாமல்லபுரம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்கள்  யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக திகழ்கிறது. இந்த பாரம்பரிய நினைவு சின்னங்களை கண்களிக்க நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்கின்றனர். இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களை காண காலை 6:00 மணி மாலை 6:00 மணி வரை சுற்றுலா பயணிகள்  அனுமதிக்கப்பட்டு வந்தனர். இரவு நேரங்களில்  மின்னொளியில் ஜொலிக்கும் சிற்பங்களை காண பார்வையாளர் நேரம் நீட்டிக்கப்பட வேண்டும் பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்ததனர். 




இரவு நேர அனுமதி


இந்நிலையில் நேற்று முதல், முறையாக மாமல்லபுரம் கடற்கரை கோவிலை மட்டும் இரவு 9 மணி வரை கண்டுகளிக்க இரவு நேர அனுமதி தொடங்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடும்பம், குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் பலர் ரூ.40-க்கு நுழைவு சீட்டு வாங்கி ஜொலிக்கும் மின் விளக்கு வெளிச்சத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலை கண்டுகளித்து ரசித்தனர். அதேபோல் வெளிநாட்டு பயணிகள் ரூ.600-க்கு நுழைவு சீட்டு எடுத்து பார்வையிட்டனர். இன்று வந்த உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் குளிர்ந்த கடல் காற்று, மின் விளக்கு வெளிச்சத்தில் மிளிர்ந்த கடற்கரை கோயில் புராதன சின்னம் முன்பு புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இனி மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேரம் வரை காத்திருந்து மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் அழகினை மின் விளக்கு வெளி்சசத்தில் ரசித்து விட்டு செல்லலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.




முதற்கட்டமாக கடற்கரை கோவிலுக்கு மட்டும் அனுமதி


முதல் கட்டமாக கடற்கரை கோயிலுக்கு மட்டும் இரவு நேர அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், மலைக்குன்றுடன் பரந்து விரிந்த வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் போன்ற புராதன சின்னங்களை பார்க்க இரவு நேர அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மிக ரம்யமாக காட்சி அலைக்கும் மகாபலிபுரம் கடற்கரை கோவிலை நீங்களும் ஒரு விசிட் அடித்து விட்டு வாருங்களேன்.




 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண