மக்களிடம் பேராசையை தூண்டி பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் செல்ல அவ்வப்பொழுது, ஏதாவது ஒரு பெயரில் ஒரு கூட்டம் நூதன முறையில் மோசடி செய்து விட்டு செல்வது வழக்கமாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்தாண்டு நடைபெற்ற மிகப்பெரிய மோசடிகளில் ஒன்று, டிரேடிங் என்ற பெயரில் தமிழ்நாட்டில் நடந்தேறியது. இதில் சிக்கி பணத்தை ஏமாந்தவர்கள் பலரும் ,நடுத்தர வர்க்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

"கோடி கோடியாய் அள்ளிச்சென்ற நிறுவனங்கள்"

 

ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம்,  1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஒருமாதத்தில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 




 

எல்பின்' நிதி நிறுவன மோசடி

 

இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேசுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆருத்ராவை தொடர்ந்து 'எல்பின்' நிதி நிறுவன நிறுவனருக்கும் நடிகர் ஆர்.கே சுரேஷ் உதவி செய்தது தற்பொழுது விசாரணையில் தெரியவந்துள்ளது

 

7 மாதமாக தலைமறைவு

 

கடந்த 7 மாத காலமாக வெளிநாட்டில் தலைமுறைவாக இருக்கும் ஆர்.கே சுரேஷை பிடிப்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் நாகப்பாம்பு படத்தை வெளியிட்டு இருந்தார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை அழித்தும் உள்ளார். 



 

அதிரடியாக ரிப்ளை கொடுத்த ஆர்.கே.சுரேஷ்

 

 

இந்தநிலையில், தனக்கு எதிராக ட்விட்டரில் பதிவு செய்த நபருக்கு ரிப்ளை கொடுத்துள்ளார் நடிகர் சுரேஷ், " நான் அப்படிப்பட்டவன் இல்லைபா, என்னை நான் நிரூபிப்பேன் நன்றி. எல்லா சமயத்தில்,  நான் மற்றவர்களுக்கு மட்டுமே உதவியிருக்கிறேன். தவறான செய்திகளை பார்க்க விரும்பவில்லை நண்பர்களே. என்னை நம்பிக் கொண்டே இருங்கள்" என ஆர்.கே.சுரேஷ் கையெழுத்து கும்பிட்டு கேட்டுள்ளார்.  இந்த நிலையில் அந்த ட்விட்டர் பதிவுக்கு ரிப்ளை செய்திருக்கும் சிலர், உங்கள் மீது தவறு இல்லை என்றால் நீங்கள் ஏன் உங்கள் தரப்பு விளக்கங்களை நேரடியாக மீடியாவில் சந்தித்து பேசக்கூடாது எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.



 

துபாயில் ஆர்.கே.சுரேஷ்

 

துபாயில் ஆர்.கே சுரேஷ் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது ஆர்.கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தை, எந்த இடத்தில் இருந்து இயக்குகிறார் என்பது குறித்து விசாரணையை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த ட்விட்டர் பதிவை எந்த செல்போன் அல்லது எந்த கணினியை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார். கணினியின் IP address அல்லது செல்போனின் சிக்னல் ஆகியவை எங்கு உள்ளது. என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்.கே சுரேஷ்யை தீவிரமாக தேடி வருகின்றனர்.