திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில், 12 ஆம் வகுப்பு மாணவி சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியின் விடுதியில் 12-ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.




நடந்தது என்ன..?


திருவள்ளூவரில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், இன்று காலை வழக்கம் போல் விடுதியில் இருந்து பள்ளிக்குச் செல்ல, சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சக நண்பர்கள் உணவு அருந்த சென்ற நிலையில், விடுதியில் தனியாக இருந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தகவலறிந்த திருவள்ளூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திர தாசன், உதவி தலைமை காவல் ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிசி கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பள்ளி நிர்வாகம் முறையான தகவல்களை அளிக்க வில்லை என்று கூறி, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலர், பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 


பதற்றத்தை தவிர்க்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   




வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .