தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன், பீடி சுற்றும் தொழிலாளி பிரேமா தம்பதிகளின் இரண்டாவது மகளான 5 வயது குழந்தை இசக்கியம்மாள், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை உணவுப்பொருள் என நினைத்து யாரும் இல்லாத நேரத்தில் சாப்பிட்டுவிட்டார். பிளீச்சிங் பவுடரை குழந்தை இசக்கியம்மாள் உட்கொண்ட நிலையில் சில வாரங்களுக்கு பின்னர் குழந்தை இசக்கியம்மாளுக்கு கடும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. சாதாரண வயிற்றுப்போக்கு என நினைத்து நாட்டு வைத்தியத்தின் மூலம் பெற்றோர் குழந்தையை குணப்படுத்த முயன்றுள்ளனர். ஆனாலும் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது.


 



 


குழந்தை இசக்கியம்மாளை அரசு மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இசக்கியம்மாளின் உணவுக்குழாய் மற்றும் குடல் பகுதியில் பிரச்னை இருப்பதை கண்டுபிடித்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உள்நோயாளியாக சேர்க்கப்பட்ட குழந்தை இசக்கியம்மாளுக்கு தொடர்ந்து உடல் மெலிந்ததால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷத்தன்மையுள்ள பொருளை உட்கொண்டதால் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் சிறுமியால் உணவு மற்றும் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டுவந்தாகவும் தெரிவித்தனர்.


 



உணவுக்குழாயில் ஏற்பட்ட மூன்று அடைப்புகளையும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து, குழந்தை சற்று உடல்நலம் தேறிய நிலையில், சொந்த ஊருக்கு அனுப்பினர். இருப்பினும் குழந்தை இசக்கியம்மாளால் உணவு சாப்பிட முடியாமல் தொடர்ந்து மெலிந்து காணப்பட்டாள். இதனையெடுத்து அரசு சார்பில் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட சிறுமிக்கு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சிறுமி இசக்கியம்மாளின் உடல்நிலை தற்போது நன்கு தேறி வருவதாக குறிப்பிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,


 





பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட 5 வயது குழந்தை இசக்கியம்மாளின் உடல்நிலை நன்கு தேறி வருவதாகவும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை இசக்கியம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தையின் வயிற்றை துளையிட்டு உணவு வழங்கும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, சிகிச்சைக்குப்பின் அவரது உடல் எடை 2 கிலோ கூடியுள்ளதாகவும், உணவு கூட உட்கொள்ள முடியாத நிலையில் எழும்பூர் மருத்துவமனைக்கு 6 கிலோ எடையுடன் வந்த சிறுமியிடன் எடை 8 கிலோவாக அதிகரித்துள்ளதாகவும், ஒருமாதம் சென்னையில் இருந்து சிகிச்சை எடுக்கவேண்டிய காரணத்தால் என்னுடைய எம்.எல்.ஏ விடுதியில் இசக்கியம்மாளின் பெற்றோரை தங்க சொல்லியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.