கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ராஜ பீமா, இவன் தான்,கடமை செய் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும், குறைந்த அளவில் படங்கள் நடித்திருந்தாலும், யாஷிகா சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருவதால், அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.




இந்நிலையில் யாஷிகா ஆனந்த் நேற்று தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்றுள்ளார். புதுச்சேரிக்கு யாஷிகா தனது தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவனி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் புதுச்சேரி சென்று இருந்தார். புதுச்சேரியில் யாஷிகா ஆனந்த்தும், நண்பர்களும் அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பின்பு பாண்டிச்சேரியிலிருந்து நேற்று இரவு  தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக  சென்னை நோக்கி சென்றுள்ளனர்.



இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் அவர்கள் வாகனம் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பொழுது, நள்ளிரவு 1 மணியளவில் சாலையின் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் கவிழ்ந்ததால் சில நிமிடங்கள் வரை வாகன ஓட்டிகள் அந்த காரை கவனிக்காமல் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காரில் இருந்தவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டு உள்ளனர். இதனைக் கண்ட சக வாகன ஓட்டிகள், அவர்களை மீட்டு நெடுஞ்சாலையில் அருகே இருந்த,  பூஞ்சேரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். 



விபத்தில் படுகாயமடைந்த நடித்த நடிகை யாஷிகா ஆனந்த், மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவனி ( வயது 28) என்பவர் சம்பவ பூஞ்சேரி விபத்து சிகிச்சை மையத்தில் முதலுதவி செய்து கொண்டிருக்கும்பொழுதே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் யாஷிகா ஆனந்தின் தோழி என்பதும், அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 



விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த, யாஷிகா தோழியின் உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தால் ஏற்பட்டதா? என மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது படுகாயம் அடைந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்துக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இதேபோல் கடந்த அக்டோபர் மாதம் கூட , சென்னை நுங்கம்பாக்கத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் மீது யாஷிகா ஆனந்த் கார் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்பொழுது இது குறித்து விளக்கமளித்து இருந்த யாஷிகா ஆனந்த் , என்னைப் பற்றி அவதூறு செய்திகள் பரப்பபடுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. விபத்து நடந்த காரில் நான் செல்லவில்லை. ஆனால் அந்த காரில் இருந்தது எனது நண்பர்கள்தான். விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அவர்களை பார்க்க நான் வேறொரு காரில் அங்கு சென்றேன். அங்கு என்னை பார்த்தவர்கள் நானும் விபத்து காரில் பயணித்தாக செய்தியை பரப்பி விட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.



பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.