கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர், இருட்டு அறையில் முரட்டு குத்து, ராஜ பீமா, இவன் தான், நோட்டா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் "கடமை செய்" ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும், குறைந்த அளவில் படங்கள் நடித்திருந்தாலும், யாஷிகா சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருவதால், அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.



இந்நிலையில் யாஷிகா ஆனந்த் நேற்று தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்றுள்ளார். புதுச்சேரிக்கு யாஷிகா தனது தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவனி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் சென்று இருந்தார். யாஷிகா ஆனந்த்தும்,  நண்பர்களும் அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பின்பு பாண்டிச்சேரியிலிருந்து நேற்று இரவு  தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக  சென்னை நோக்கி சென்றுள்ளனர்.




இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் அவர்கள் வாகனம் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பொழுது, நள்ளிரவு 1 மணியளவில்  சாலையின் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் கவிழ்ந்ததால் சில நிமிடங்கள் வரை வாகன ஓட்டிகள் அக்காரை கவனிக்காமல் இருந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து காரில் இருந்தவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டு உள்ளனர். இதனைக் கண்ட சக வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு நெடுஞ்சாலையில் அருகே இருந்த,  பூஞ்சேரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். 



விபத்தில் படுகாயமடைந்த நடித்த நடிகை யாஷிகா ஆனந்த், மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி ( வயது 28) என்பவர் பூஞ்சேரி விபத்து சிகிச்சை மையத்தில் முதலுதவி செய்து கொண்டிருக்கும்பொழுதே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் யாஷிகா ஆனந்தின் தோழி என்பதும், அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 



முதற்கட்ட தகவலின் அடிப்படையில் யாஷிகா, காரை ஓட்டி வந்ததை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 279,337,304 A,  அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தும் வண்ணம் காரை ஓட்டியது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்பொழுது மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில்,  காரில் வரும்போது கார்  பாடல் போட்டு டான்ஸ் ஆடி  வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த, யாஷிகா தோழியின் உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.