டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான  உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி அறிவிப்பானை வெளியிட்டது. 

 

தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும்  இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறி ஆகஸ்ட் 2 ம் தேதி அறிவிப்பாணைக்கு தடை கோரி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமதாரர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

அந்த மனுக்களில், ஏற்கனவே பார் உரிமம் பெற்றுள்ள தங்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் இடையில் அந்த இடத்திற்காக குத்தகை ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ள படவில்லை என்றும், நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அந்த இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்க  நிர்பந்திக்க முடியாது என்றும்  குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

தற்போதைய பார் உரிமையாளர்களின் உரிமையை பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டெண்டரை ரத்து செய்து, உரிமத்தை நீடித்து தர உத்தரவிட வேண்டும் என்று மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், எட்டு மாவட்டங்களில் டாஸ்மாக் பார் டெண்டர் குறித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிய டெண்டர் அறிவிப்பாணையை வெளியிடும் போது, நில உரிமையாளரிடம் ஆட்சேபமில்லா சான்று பெற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


 

 




















மற்றொரு வழக்கு

 

நாட்டின் நீடித்த வளர்ச்சி, சமூக, பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை போதைப் பொருளால் பாதிக்கப்படுவதாக சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

கடந்த 2017ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்ல இருந்த திருவள்ளுர் மாவட்டம் நெமிலிச்சேரியை சேர்ந்த மஹின் அபுபக்கர், சிவகங்கை தேவக்கோட்டையை முகமது மீரா ரஜூலுதீன் ஆகியோரிடமிருந்து 2 கிலோ ஹெராயின் முயன்றதாக வருவாய் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

 

இதுதொடர்பான வழக்கு சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் அவரது உத்தரவில், பொது சுகாதாரத்திற்கு பெருத்த அச்சுறுதலாக போதைப் பொருள் இருப்பதாகவும், அதனால் உலக சமுதாயம் தீவிர அச்சுறுத்தலை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் நீடித்த நீடித்த வளர்ச்சி, சமூக, பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை போதைப் பொருளால் பாதிக்கப்படுவதாகவும், பயங்கரவாத குழுக்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.