கோயம்பேட்டில் இருந்து...

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பணிமனையை சேர்ந்த, TN21, N 1725 என்ற எண்ணினை கொண்ட பேருந்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, சென்னை - திருச்சி ( GST சாலை ) தேசிய நெடுஞ்சாலை வழியாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த, ஊரப்பாக்கம் பகுதியில், செங்கல்பட்டை நோக்கி சுமார் 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. 

 



 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த பேருந்து, பேருந்து கிளம்பியதில் இருந்தே அதிக சத்தத்துடன் சென்று கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது ஊரப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது, மிகப்பெரிய சத்தத்துடன் பேருந்தின் பின்பக்கம் இருந்த, சக்கரமானது கழன்று சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக ஓடி உள்ளது. இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பிரேக் அடித்து பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.

 

சாலையில் தனியே ஓடிய டயர் 

 

உடனடியாக பேருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சாலையின் மையப் பகுதியில் சாய்ந்து நின்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற பொழுது மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்தை விட சற்று குறைவான வாகனங்களை சென்றுள்ளது. இதன் காரணமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதியில் பேருந்து, நீண்ட நேரம் குடை சாய்ந்து நின்றதால்,  போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து போக்குவரத்தை சரி செய்தனர்.



மேலும் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பேருந்து, அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து குடை  சாய்ந்ததால் பேருந்தில், பயணித்த 8 நபர்களுக்கு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்து குடை சாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அரசு பேருந்தும் சர்ச்சைகளும்..

 

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டின் அரசு பேருந்துகள் தொடர் சர்ச்சையில் சிக்கி வருகின்றன. மழைக்காலங்களில் , பேருந்தில் செல்லும் பயணிகள் குடை பிடித்து படி செல்லும், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதும், அதேபோல பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்தில் தொங்கிச்செல்லும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில், வைரலாக பரவி வருவதும் தொடர்கதை ஆகியுள்ளது.