அனைத்து பணிகளும் நிறுத்தி வைப்பு


தமிழ்த் திரைப்படத் துறையின் விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்த வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முடிவு செய்து , கடந்த ஆகஸ்ட் 16 முதல் புதிய திரைப்படங்கள் தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 31 தேதிக்குள் அனைத்து விதிமுறைகளையும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுத்த பின் நவம்பர் 1 - ம் தேதி முதல் புதிய விதிமுறைகளோடு படப்பிடிப்பு தொடங்குவது என்றும் , இல்லையெனில் அனைத்து பணிகளும் நிறுத்தி , சுமூக முடிவெடுத்த பின்னர் படப்பிடிப்பு தொடங்குவது என்றும் , அதுவரை அனைத்து பணிகளையும் நிறுத்தி வைப்பது முடிவெடுக்கப்பட்டது. என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.


இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக பெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே செல்வமணி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.


அதில் நடிகர் தயாரிப்பாளர்கள் சங்கம் மறுசீரமைப்பு செய்து , சம்மேளனத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு உடனடியாக அனைத்து சங்கங்களுடன் விவாதித்து , கடந்த வாரம் அதற்கான பதிலை தெரிவித்துள்ளோம். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் , சம்மேளனத்திற்கு அனுப்பிய மறுசீரமைப்பிற்கான விதிமுறைகள் அனைத்திற்கான பதிலை கடந்த வாரமே தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அனுப்பி உள்ளோம். இந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி, விரைவில் முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


ஏற்கனவே புதிய திரைப்படங்கள் தொடங்குவது நிறுத்தப்பட்டமையால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பேச்சு வார்த்தை செப்டம்பர் 30 - க்குள் முடிவெடுத்து , அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகளோடு அனைத்து படப்பிடிப்புகளும் தொடங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.


மேலும் திரைப்படத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து சம்மேளனத்தின் சார்பில் இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம் , டப்பிங் யூனியன் , மகளிர் யூனியன் உள்ளிட்ட 7 சங்கங்களில் இருந்து இரண்டு பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், சமூக சேவகர்கள் மற்றும் பத்திரிகையாளர் அமைப்பில் இருந்து மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம். புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். 


தனுஷ் பட விவகாரம்


தனுஷ் பட விவகாரத்தில் அவர் படத்தின்‌ படப்பிடிப்பு ஜூலை மாதமே தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் முறைப்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தெரிவிக்கவில்லை. பதிவும் செய்யவில்லை. வொண்டர் பார் நிறுவனத்தின் அறியாமை அல்லது மெத்தனப்போக்கு காரணமாக சம்மேளனம் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. பின்னர் ஜூலையிலேயே படப்பிடிப்பு நடந்ததற்கான ஆதாரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தயாரிப்பாளரின் வேண்டுகோள் மற்றும் பெப்சியின் பரிந்துரை கடிதம் ஆகியவற்றை ஏற்று தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது. 


திரையுலகில் பாலியல் புகார்


பாலியல் புகாரில் எச்சரிக்கை என்பது சரிவராது . குற்றத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும். குற்றத்தின் தன்மை தீவிரமான இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் திரையுலகில் இது போன்ற புகார்கள் ரொம்ப குறைவு. பெண் தொழிலாளர்கள் மீது அத்துமீறல் செய்யும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் உங்களுக்கு சம்மேளனம் துணை நிற்கும். விசாரணை ரகசியமாக நடத்தப்படும். தைரியமாக புகார் அளிக்கலாம். தமிழ் திரையுலகில் உள்ள உப்புமா கம்பெனிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். திரைப்படத்துறை பெயரை சொல்லி ஏமாற்றும் கும்பல் உள்ளது.


நவம்பர் 1ம் தேதி முதல் தமிழ் சினிமாவின் காட்சி அமைப்புகளுக்கு தேவையில்லாத காட்சிகளை வேறு மாநிலங்களிலோ அல்லது நாட்டிலோ போய் எடுத்தால் அது எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் அதற்கு பெப்சி ஒத்துழைப்பு தராது. 70சதவீதம் படப்பிடிப்பு தமிழகத்தில் நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக இருந்தது . இப்போது இதுதான் எங்களின் முடிவு என்று தெரிவித்தார்.