தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி தனது காதலனால் கத்தியால் குத்திக்கொலை கொலை செய்யப்பட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது இதே போன்றதொரு சம்பவம் சென்னையில் மீண்டும் நிகழ்ந்துள்ளது.


 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அதன் முன்னோட்டமாக வளிமண்டல சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பல மாவட்டங்களாக மழை கொட்டி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில்  ஆலோசனை நடத்துகிறார்.

 

சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை, பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக, கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குயின்ஸ்லேண்ட் பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் காஞ்சிபுரம் காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசாமி கோயிலுக்கு சொந்தமானது. இதை சமுத்திரமேடு கிராமத்தை சேர்ந்த உதயகிரி சாமைய்ய ஜமீன்தாரின் மகன் வெங்கய்யா கோயிலுக்கு எழுதி கொடுத்துள்ளார். இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விரைவில் சட்டப்போராட்டம் நடத்தி அது கோயில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் அலுவலகம், வீடு உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கு இன்று சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

 

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது. வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள் என்பதால், நாளையே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகவுள்ளது.

 

இன்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டத்திற்கு உட்பட்ட திருப்பாச்சூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்து தருவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கிராம நிர்வாக அலுவலர் திருமாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.