தந்தை சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் மீது குற்றம்சாட்டி மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 

நடிப்புக்கே தனிப்பெரும் உதாரணமாகத் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். இவர் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள், தெலுங்கு மொழியில் 9 திரைப்படங்கள், ஹிந்தியில் 2 படங்கள் மற்றும் 1 மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்திய திரையுலகில் செவாலியர் பட்டம் முதல் நடிகர் சிவாஜி கணேசன் கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன், தாதா சாகேப் பால்கே விருது என பல விருதுகள் இவரது நடிப்பின் திறமையை பாராட்டி கௌரவிக்கின்றன. மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும்; சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர்.
  

 

கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

 

மேலும், தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை விற்றுள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டதாகவும், சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

 

நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ஏமாற்றி விட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் தவிர, இருவரின் மகன்களாக விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண