ஸ்ரீதேவி நிருத்யாலயா நடன பள்ளி சார்பில், 'சிவ நவ பக்தி' எனும் தலைப்பில், 19-வது நாட்டிய நாடகம், சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இதில், சிவனை அடைய வழிவகுக்கும், 'சிவ நவ பக்தி' எனும் ஒன்பது விதமான பக்தியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாட்டிய நாடகம் நடைபெற்றது.
58 பேர் பங்கேற்ற பிரமாண்ட நாட்டிய நாடகம்
ஸ்ரீதேவி நிருத்யாலயா நடன பள்ளியைச் சேர்ந்த 58 பேர், இந்த நாட்டிய நாடகத்தில் பங்கேற்று, ஒன்பது விதமான பக்தியை சிறப்பாக வெளிப்படுத்தினர். சிவன் மீதான பக்தியை போற்றும் வகையில், சிவ மஹா புராணம், தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, இந்த நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் கதையை ஷோபா எழுதியுள்ளார். நடன அமைப்பை நடன பள்ளியின் நிறுவனர் ஷீலா உன்னி கிருஷ்ணன் அமைத்திருந்தார்.
எம்பார் கண்ணன் இசையில், டாக்டர் ரகுராமன் பாடல் வரிகளில், இந்த நாட்டிய நாடகம் நிகழ்த்தப்பட்டது. தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்ட பக்தர்களின் நெகிழ்ச்சியான கதைகளை வைத்து, ஒவ்வொரு பக்தி முறையும் காட்சியாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பான காட்சிமுறை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
குறிப்பாக, காரைக்கால் அம்மையாரின் கணவர் பரமதத்தன், பக்தியால் மரணத்தை வென்ற மார்க்கண்டேயன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த நாட்டியக் கலைஞர்கள், ரசிகர்களின் மனதை நிறையச் செய்தனர்.
ரசிகர்களின் மனம் நிறைந்தது போலவே அரங்கும் இறுதி வரை நிறைந்திருந்தது.