காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக உலகத்தில் இருக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலையும் அப்பகுதியில் அமைந்திருக்கின்றன. 


சாம்சங் ஊழியர்கள் போராட்டம்


அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.


இந்நிலையில் சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிஐடியு சங்கம் துவக்கப்பட்டது. சங்கம் அமைத்தற்கான அறிமுக கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது . இதனை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை குறித்து நிர்வாகத்திற்கு மகஜர் அனுப்பப்பட்டது. இதையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என தொழிலாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.


முக்கிய கோரிக்கைகள் என்னென்ன  ?


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க நிர்வாகிகள், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் வேண்டும். இன்டெர்னல் கமிட்டி அமைப்பதை கைவிட வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க சிஐடியூ உறுப்பினர்களை நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில், இணையுமாறு ஆலைக்குள் பணி செய்யும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது கட்டாயப்படுத்துவது மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.




போட்டி அமைப்பை உருவாக்குவதை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் அமைத்துள்ள சிஐடியூ தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விடாமல் , தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்பந்திப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிஐடியு சார்பில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . 


சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை


இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சாம்சங் நிறுவனம் , கடந்த வெள்ளிக்கிழமை எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தது , "ஊழியர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது. போராட்டத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு வரவில்லை என்றால் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. ஊழியர்களுக்கு பணிக்கு திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் செய்ய நேரிடும்" என்று சாம்சங் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 




 


மீண்டும் இன்று பேச்சுவார்த்தை


இதுவரை சாம்சங் நிறுவனம், தொழிலாளர் நலத்துறை மற்றும் நிர்வாகிகள் நடத்திய மூன்று பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன.  முன்னதாக சாம்சங் ஊழியர்களை மிரட்டுவதாக சிஐடியு தொடர்ந்து வழக்கில் , ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்தநிலையில் இன்று மீண்டும் தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.