சென்னையில் காய்கறி விநியோகம் செய்வோரின் செல்போன் மற்றும் பெயர் விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு எந்த தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலானது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்கவும், பால் விநியோகத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


மேலும், ஊரடங்கு காலத்தில் 4,380 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வீடு வீடுடாகச் சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வேளாண் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில், சென்னையில் மக்களின் தேவைகள் கருதி நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை மற்றும் பிரட் ஆகியவற்றையும் கொண்டு செல்ல சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். 


மேலும், சென்னையில் காய்கறி விநியோகம் செய்வோரின் செல்போன் மற்றும் பெயர் விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வியாபாரியின் பெயர், செல்போன் எண், வாகன எண் மற்றும் பகுதியின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


முழு ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி



* மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்


* பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்


* பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்


* உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்


* பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்


* ஏ.டி.எம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.


* வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்


* தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


* மின்னணு சேவை (E-commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.


தமிழகத்தின் பெரிய மாநகராட்சியான மதுரையில் ஏற்கனவே வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் வினியோகம் செய்யும் முறையை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. கடந்த அலையில் மேற்கொண்ட அதே நடவடிக்கையை தற்போதும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.