பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு பேருந்து விடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கோயம்பேட்டில் இருந்து அதிகளவு பேருந்துகள் தென்மாவட்ட மக்களுக்கு இயக்கப்படுகிறது.   இந்நிலையில் பேருந்துகள் தரமாக இருக்கிறதா முறையான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று இரவு 7 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுரை செல்லும் சிறப்பு சொகுசு பேருந்து கோயம்பேட்டில்  அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.



 இதனையடுத்து ஆய்வுசெய்யப்பட்ட பேருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து வந்து கொண்டிருந்தது. திடீரென செங்கல்பட்டு சுங்கச்சாவடி ஐயப்பன் கோவில் அருகே வந்தபோது, அந்த பேருந்தில் இருந்து மளமளவென புகை வந்தது. இந்த புகை வேகமாக பரவியதால் , பேருந்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.



 

இதனைத் தொடர்ந்து அந்தப் பயணிகள் அந்த பேருந்தில் இருந்து வெளியேறி வேறு பேருந்துக்காக காத்திருந்தோம் நீண்ட நேரமாக அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழிவதால் வேறு பேருந்தில் ஏற முடியாமல் பயணிகள் கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கி தவித்து வந்தனர். கோயம்பேட்டில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு அனுப்பிய பேருந்து செங்கல்பட்டு டோல்கேட் வருவதற்குள்ளாகவே புகைவந்து நின்று போனது பயணிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

 

இரண்டு மணி நேரம் தொடர்ந்து பயணிகள் வேறு பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து துறையினர் வழியில் சென்ற பேருந்துகளை மடக்கி பொதுமக்களை வேறு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். அதிக அளவு பொதுமக்கள் வெளியேறுவதால் செங்கல்பட்டில் கூடுவாஞ்சேரி மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இயல்பை விட பல மணி நேரங்கள் பயணத்திற்காக எடுத்துக் கொண்டது, இந்நிலையில் பேருந்து வழியில் நின்று காலதாமதம் ஆனதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.