அண்மையில் சொத்து வரியை அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உயர்வு 2022-23ஆம் ஆண்டிற்கான முதலாம் அரையாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.


அதன்படி, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 1,201 முதல் 1,800 சதுர அடி வரை 75 சதவீதமும், 1,800 சதுர அடிக்கு அதிகமான கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.



வெங்கடேசன்


 


தமிழக அரசு விளக்கம்


சொத்து வரி உயர்த்தப்பட்டது ஏன் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு அளிக்க வேண்டிய அடிப்படைத் தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திப் பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும். அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் சொத்து வரி சீராய்வு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல தற்போது, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள சொத்து வரியானது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.



நாகப்பன்


 


பிற நகரங்களில் குறைவான வரி


சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு தற்போது விதிக்கப்படும் குறைந்தபட்ச சொத்துவரி ரூ.810 ஆகும். சீராய்விற்குப் பிறகு, இது ரூ.1215 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு, மும்பையில் ரூ.2,157 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,464 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,510 ஆகவும் மற்றும் புனேவில் ரூ.3,924 ஆகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில் சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ச சொத்துவரி ரூ.3,240 ஆகும். சீராய்விற்குப் பிறகு, இது ரூ.4,860 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு, பெங்களூருவில் ரூ.8,660 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.15,984 ஆகவும், புனேவில் ரூ.17,112 ஆகவும் மற்றும் மும்பையில் ரூ.84,583 ஆகவும் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டே வரி விதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


 


அதேபோல, 24 ஆண்டுகளாகச் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குவது பற்றி, மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் வரிவிதிப்பு குறித்த சாமானிய மக்களின் மனநிலை எப்படி உள்ளது? பார்க்கலாம்.  


நடுத்தர மக்களையே குறிவைப்பது ஏன்?


சூளைமேட்டைச் சேர்ந்த ராஜேஷ் 'ஏபிபி நாடு'விடம் கூறும்போது, ''பேருக்குத்தான் சொந்த வீட்டில் இருக்கிறோம். இருந்தாலும் அன்றாடம் வேலைக்குப் போனால்தான் தேவைகளை நிறைவேற்ற முடிகிறது. நகரின் பிரதானப் பகுதிகளில் இருக்கும் பெரு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், உணவகங்களே சொத்து வரியைச் செலுத்தவில்லை. அதற்கு பதிலாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஏமாற்றுகின்றனர். 


நடுத்தர மக்கள் கொரோனா காலத்திலும் ஏறும் விலைவாசியாலும் கடுமையாக அவதிப்படுகின்றனர். எனினும் பயத்தாலும் ஆதார நேர்மை உணர்வாலும் சிரமப்பட்டாவது, வரியை முறையாகக் கட்டிவிடுகின்றனர். ஆனாலும் அரசு அவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கிறது. எவ்வளவுதான் கூடுதலாகச் சம்பாதித்தாலும் பெரு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்கின்றன. அவர்களிடம் அரசு கறார் காட்டுவதில்லை. 


அதனால் நடுத்தர மக்களின் வீட்டு வரியை உயர்த்துவதைத் தாண்டி, பெரு நிறுவனங்கள் நிலுவை வைத்திருக்கும் வரியை வசூல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்''. 


சைதாப்பேட்டையைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் வெங்கடேசன் கூறும்போது, ''பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை அரசு உயர்த்தி இருக்கிறது. விலைவாசியும் அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ள சூழலில், சொத்து வரியை உயர்த்தியுள்ளது சரியில்லை. இது  கண்டிப்பாகப் பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். 


வட்டிக்குக் கடன் வாங்கி நிலம் வாங்கி, வீடு கட்டி, சொத்து வரி கட்டுகிறோம். வரி கட்டிதான் இணைப்புகளைப் பெறுகிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் வரி கட்ட வேண்டும் என்பது சரியான போக்கில்லை''. 


பொருளாதார நிபுணர் நாகப்பன் 'ஏபிபி நாடு'விடம் விரிவாகப் பேசினார். 


''நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூரு, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட மாநகரங்களின் சொத்து வரி மதிப்போடு ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் சொத்து வரி மிகவும் குறைவாக இருந்தது. இப்போதுதான் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளின் சொத்து வரி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். 


அதேபோல கட்டிடங்கள் 600 சதுர அடி, 1,200 சதுர அடி என்று பிரிக்கப்பட்டு, வீட்டின் அளவுக்கேற்ப சிறிய வீட்டுக்குக் குறைந்த வரியும், பெரிய வீடுகளுக்கு அதிக வரியும் விதிக்கப்பட்டுள்ளது சரியான முடிவு. இதை அனைத்துத் தரப்பினரும் வரவேற்க வேண்டும். 


அதே நேரத்தில் ஊராட்சிகள், பஞ்சாயத்துகள், சிறிய நகரங்களில் உள்ள கட்டிடங்களுக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. விருதுநகர், ராமநாதபுரத்தில் உள்ள ஊராட்சிகளிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிற மாநில சிறு நகரங்களுடன் எந்த ஒப்பீடும் அளிக்கப்படவில்லை. இந்த உயர்வை அரசு மறு பரிசீலிக்க வேண்டும். மாநகரங்களுடன் ஒப்பிடும்போதுஏற்கெனவே, சிறு நகரங்களில் உள்ள வீடுகளுக்கான சொத்து வரி அதிகமாக இருந்தது. இந்த நிலையில் வரி விதிப்பு மேலும் உயர்த்தப்பட்டுள்ளது, அங்கு வசிக்கும் மக்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்தும். 


அதேபோல சொத்து வரி விதிப்பு அதிகரிப்பின் மூலம் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகளின் வாடகைத் தொகையை உயர்த்தவும் வாய்ப்புண்டு. இதனால் வாடகை வீட்டில் வசிக்கும் மக்களும் கணிசமாக பாதிக்கப்படுவர்.


என்ன செய்ய வேண்டும்?


வரிவிதிப்பு குறைவாக உள்ள இடங்களில் அதிகரிப்பதும், அதிகமாக உள்ள இடங்களில் சொத்து வரியைக் குறைப்பதுமே சரியாக இருக்கும். வரியைக் குறைக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் ஊராட்சிகள், சிறுநகரங்களில் இருக்கும் சொத்து வரியை இப்போது ஏற்றாமல் இருக்க வேண்டும். 


அதேபோல நீண்ட ஆண்டுகளாக  சொத்து வரியை உயர்த்தாமல் இருந்துவிட்டு, இப்போது திடீரென 100 சதவீதம், 150 சதவீத அளவுக்கு உயர்த்துவது சரியான முடிவாக இருக்காது. 


ஆண்டுதோறும் பண வீக்கத்தின் அடிப்படையில் வரியை உயர்த்த வேண்டும். திடீரென அல்லாமல், அறிவியல்பூர்வமாக, தரவுகளின் அடிப்படையில், வரி விதிப்பின் மதிப்பு படிப்படியாக உயர்த்தப்பட வேண்டும்.'' 


இவ்வாறு பொருளாதார நிபுணர் நாகப்பன் தெரிவித்தார்.