மத்திய அரசின் சாகர்மாலாதிட்டத்தின் கீழ், கடலோர படகு போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, நாட்டின் 7,500 கி.மீ. கடலோர பகுதியில் படகு போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டமாக, ‘சாகர்மாலாதிட்டம் உள்ளது. பல வழித்தடங்களில் ரோ-ரோ, ரோ-பேக்ஸ்என்ற சரக்கு மற்றும் பயணியர் கப்பல் சேவைகளுக்கான பணிகள் இதன் ஓர் அம்சமாக இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.


வர்த்தக ரீதியிலான மத்திய அரசின் இந்த முயற்சியை அமல் படுத்துவதற்கான வழித்தடங்களை அடையாளம் காண, தனியார் நிறுவனங்களை, மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. நாள்தோறும் பயணம் மேற்கொள்பவர்கள், சுற்றுலா பயணியர், சரக்கு போக்குவரத்தில் ஈடுபடுபடுபவர்களுக்கு, இந்த துணை போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலுார், நாகப்பட்டினம், காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து அறிமுகமாக உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.




இதுகுறித்து, சென்னை துறைமுக நிர்வாகம் தரப்பில், சென்னை துறைமுகத்தில் ரோ-ரோ, ரோபேக்ஸ்என்ற கப்பல் சேவை, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில், கார்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. பயணிகளும் செல்லலாம். இந்த வசதியை மற்ற துறைமுகங்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில், கப்பலை இயக்க ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தோம். சென்னை துறைமுகத்திற்கு, பயணிகள் கப்பல் வந்து செல்கிறது. புதுச்சேரியிலும் 4 மீட்டர் ஆழத்தில் கப்பல் நிறுத்துமிடம் தயாராகி வருகிறது. கடலுார் துறைமுகத்திலும், 9 மீட்டர் ஆழம், 240 மீட்டர் நீளத்தில் கப்பல் நிறுத்துமிடம் செப்டம்பர் மாதத்தில் தயாராகி விடும். இதில், 120 மீட்டர் நீளமுடைய இரண்டு கப்பல்களை நிறுத்தலாம். அதே போல, காரைக்கால் துறைமுகத்தில் 130 மீட்டர் நீளத்தில் கப்பல் நிறுத்தும் தளம் உள்ளது.




புதுச்சேரியில் 4 மீட்டர் ஆழத்தில் கப்பல் நிறுத்துமிடம் தயாராகி வருகிறது. கடலுார் துறைமுகத்திலும், 9 மீட்டர் ஆழம், 240 மீட்டர் நீளத்தில் கப்பல் நிறுத்துமிடம் செப்டம்பர் மாதத்தில் தயாராகி விடும்.


இங்கிருந்து கொழும்பு - காரைக்கால் - சென்னை கப்பல் போக்குவரத்தை இயக்கும் திட்டமும் உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலுார், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் இடையே, ரோ-ரோ, ரோபேக்ஸ் கப்பல்கள் இயக்குவது குறித்து, முதற்கட்ட ஆலோசனை கூட்டத்தில், விருப்பம் உள்ள ஐந்து நிறுவனங்கள் பங்கேற்றன. இதற்காக துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த வசதி அடுத்த ஐந்து மாதத்தில் தொடங்கக் கூடும். இதன் மூலம், சென்னையில் இருந்து கப்பலில் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். சாலை நெரிசலும் குறையும். துறைமுகங்களில் தேவையான வசதிகள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.