சென்னையின் நுங்கம்பாக்கம் கடந்த செவ்வாய் அன்று(20 ஜூலை 2021) வரை மொத்தம்  220.5 மிமீ மழையை பதிவு செய்தது. இது கடந்த 13 வருடங்களில் இல்லாத அளவு என நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை பதிவு மையம் குறிப்பிட்டுள்ளது.இதற்கு முன்பு ஜூலை 2007ல் தான் அதிகபட்சமாக சென்னை சுமார் 243.9 மிமீ மழையை பதிவு செய்யப்பட்டது. இதற்கு அடுத்த வாரங்களிலும் சென்னையின் சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னையின் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் தட்பவெப்பம் 35 டிகிரியிலிருந்து 26 டிகிரிக்குள் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் மழை பதிவுகளின்படி இந்த மாதத் தொடக்கத்தில் மீனம்பாக்கத்தில் 121.3 செமீ மழையும் பதிவாகியுள்ளது.






சென்னையின் அதிகபட்ச மழைப்பதிவாக 2001ல் 269.8 மிமீ மழைப்பதிவாகியுள்ளது. சென்னையின் சராசரி மழைப்பதிவான 138.7 மிமீ என்கிற பதிவை விட ஐம்பது சதவிகிதம் அதிகமாகவே கடந்த ஜூன் மாதத்தில் பெய்துள்ளது.மேற்கிலிருந்து மட்டுமல்லாமல் தென் கிழக்கிலிருந்து ஈரப்பதம்மிக்க காற்று வீசுவதாலும் சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். சென்னையின் அமைந்தகரை, சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 17 மற்றும் 18 அன்று தொடர்ச்சியான தூறல் இருந்தது. இந்த பரவலான தூறலால் 137.6 மிமீ மழை பதிவானது. 
இந்த இரண்டு நாட்கள் கடந்த 200 வருடங்களில் அதுவரை இல்லாத அளவுக்கான ஈரப்பதமான நாட்கள் எனக் குறிப்பிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான். கடைசியாக 1813ல் தான் இவ்வாறு மழைபெய்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த சில தினங்களுக்கு லேசான  தூறல் இருக்கும் என அவர் கணித்துள்ளார்.   


 


முன்னதாகக் கடந்த 17ந் தேதிக்கான வானிலை ஆய்வு மையத் தகவலின்படி அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு நீடிக்கும் என்றும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்றால் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில்,


’தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று  காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


 


18.07.2021: நீலகிரி, கோயமுத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில லேசான மழை பெய்யக்கூடும்.


19.07.2021: கோயமுத்தூர், தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.


20.07.2021, 21.07.2021: கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்’ என ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.