விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் வெங்கடேஷ், பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பலரும் அவற்றை பயிரிட்டு வருகிறார்கள். நுகர்வோர் மத்தியிலும் பாரம்பரிய அரிசிக்கான தேவை அதிகரித்து கொண்டே வருகிறது.



விழுப்புரம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறார் வெங்கடேஷ். இவருக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் சிறு வயது முதலே படித்த நேரம் போக, மற்ற நேரங்களில் அவரது தந்தையுடன் சேர்ந்து தோட்டத்தில் சின்னச் சின்ன விவசாய வேலை பார்த்து வந்துள்ளார்.தற்போது விவசாயம்தான் எல்லாமே என்கிற அளவுக்கு அவர் வாழ்வியல் விவசாயத்தில் கலந்துவிட்டது.  வெங்கடேஷ் 2015-ல் கட்டடவியல் துறை (சிவில் இன்ஜினீயரிங்) படித்துள்ளார். 2015-ம் வருடத்திற்கு முன்பு வரை, அவரது தந்தையுடன் செயற்கை முறை விவசாயம் தான் செய்து இருந்தார். ஏக்கருக்கு 35 மூட்டை வரை மகசூல் கிடைத்து வந்துள்ளது. ஆனால் வரவும் செலவும் சரியா இருந்ததாக இருந்துள்ளது. முக்கியமாக பூச்சியையும், தண்ணீர் தட்டுப்பாட்டையும் சமாளிக்க மிகச் சிரமம் இருந்ததாக தெரிவிக்கிறார். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு லாபமும் வரவில்லை.



இந்த நிலையில் வெங்கடேஷ் படிப்பு முடிஞ்சதும் எங்கேயும் வேலைக்குப் போகாமல். இயற்கை விவசாயத்துல முழுமையா ஈடுபடத் தொடங்கி விட்டார். ஆரம்பத்தில் பல தடுமாற்றங்கள் இருந்ததாகவும். முதல் தடவை இயற்கை விவசாயம் செய்யும்போது‌ ஒரு ஏக்கருக்கு 7 மூட்டை மட்டுமே மகசூல் கிடைத்ததாகவும். பிறகு நண்பர்கள், விவசாய தொழில்நுட்ப நிலையத்தில் உள்ளவர்கள் மற்றும் அனுபவ விவசாயிகள் பலரிடம் ஆலோசனைக் கேட்டுள்ளார். அதன் பிறகு அவர்கள் வழங்கிய ஆலோசனைப்படி மீண்டும் விவசாயத்தை தொடங்கினார். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமா மகசூல்  அதிகரித்துள்ளது. தற்போது நல்ல மகசூல் கிடைத்து வருவதாகவும் வெங்கடேஷ் மனநிறைவுடன் தெரிவிக்கிறார்.  ஏக்கருக்கு 7 மூட்டைகள் என இயற்கை விவசாயத்தை ஆரம்பித்த வெங்கடேஷ். தற்போது அதிகபட்சமா 35 மூட்டை (70 கிலோ) தூயமல்லி நெல்லை சம்பா பருவத்தில் மகசூலாக எடுத்து வருகிறார்.



தைப்பட்டத்தில்  நடவு செய்த கருங்குறுவை ரகத்தில் 20 மூட்டைகள் மகசூல் எடுத்துள்ளார். 20 மூட்டைகள் மூலமா 1,400 கிலோ நெல் மகசூல் கிடைத்துள்ளது. அதைத் தரமான விதையாகத் தரம் பிரிக்கும்போது சுமார் 850 கிலோ விதை நெல் கிடைக்கும். பதர்களை மாடுகளுக்குத் தவிடாக மாற்றித் தீவனமாகக் பயன்படுத்தி வருகிறார். ஒரு கிலோ விதை நெல்லை சராசரியாக 90 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறார். விதைத் தேவைப்படுபவர்கள் வீட்டுக்கே வந்து ஆர்வமா வாங்கி செல்கின்றனர். விற்பனைக்காக அவர் கடைகள் போன்ற வேற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாரம்பரிய விதை நெல்லை, சணல் சாக்கில் மட்டுமே மூட்டைப் பிடித்து. பூச்சியின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக நொச்சி, நுணா, வசம்பு, வேப்பிலை மாதிரியான இலை பொடிகளைத் தூவி வைத்து பாதுகாப்பு செய்கிறார். ஒரு ஏக்கருக்கு 35,300 ரூபாய் வரைக்கும் செலவாகும். வேலை ஆட்கள் இல்லாமல் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் செலவு மிகவும் குறையும். ஆனால், அதை நான் செய்ய மாட்டேன் என்கிறார் வெங்கடேஷ். இந்த 20 மூட்டை நெல் மூலமா 76,500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதில் செலவுகள் போக 41,200 ரூபாய் லாபம் கிடைப்பதாக கூறுகிறார். அதுவே எனக்கு மனநிறைவான லாபம்தான் என்கிறார்.



நாற்று நடவு செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பு பலதானியம் விதைத்து அதை நாற்று நடவு செய்வதற்கு 15 நாள்களுக்கு முன்பு, மடக்கி உழுது மட்கச் செய்ய வேண்டும். சேடை உழவு ஓட்டும் போது கூடுதலாக வேம்பு, நொச்சி, நுணா, எருக்கு இலைகளைப் நிலத்தோட வளத்துக்கு ஏற்ப போட வேண்டும். 15 முதல் 25 நாள்களுக்குள் நாற்று பறித்து நடவு செய்ய வேண்டும். நன்கு கிளைக்கும் திறன் கொண்ட நெல் ரகமாக இருந்தால், ஒற்றை நாற்று முறையிலும், குறைவாகக் கிளைக்கும் திறன் கொண்ட நெல் ரகமாக இருந்தால் மூன்று நாற்றுகளை இணைத்தும் நடவு செய்ய வேண்டும். முக்கால் அடிக்கு, அரையடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நெல் ரகத்துக்கு ஏற்றாற்போல இடைவெளியைக் கூட்டிக் குறைத்துக்கொள்ளலாம். அதிக இடைவெளியில் நடவு செய்வது நல்ல பயனைத் தரும். காற்றோட்டத்துடன் நன்கு கிளைத்து வளரும். மகசூலும் சிறப்பாக இருக்கும். ஆள்களைக் கொண்டு களை பறிப்பதற்கு முன்பு கோனோவீடர் கொண்டு களையெடுக்க வேண்டும்.



நடவு செய்த முதல் 10 நாள்களில் ஏக்கருக்கு 300 கிலோ கனஜீவாமிர்தமும், 10 நாள்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தமும் தரை வழியாகப் பாசன நீருடன் கொடுத்து வருகிறார். 20 நாள்களுக்குள் மீன் அமிலமும், 30 நாள்களுக்குள் பூச்சிவிரட்டியையும் தெளிக்க வேண்டும். தேவைக்கு ஏற்றாற்போல் காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதுமானது. கதிர்கள் வரும்போது மட்டும் மோர் கரைசல் தெளிக்கலாம். அதன் மூலம் நெல் மணிகள் திரட்சியாகவும், பதர்கள் அதிகமின்றி மகசூல் கிடைக்கும் என்றார் வெங்கடேஷ்.