சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஆனது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைகிறது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த விமான நிலையம் அமையும் இடமான பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 12 கிராம மக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த கிராம மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கருத்து கேட்டு கூட்டத்தினை நடத்தினார்.



 

ஜிகே மணி தலைமையில் குழு

 

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ‘சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துர் மற்றும் அதன் சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைகிறது என தமிழக அரசு அறிவித்த நிலையில், அந்த திட்டத்தினை எதிர்த்து மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அது தொடர்பாக இன்று அவர்களின் கருத்துக்களை நாங்கள் கேட்டு அறிந்திருக்கிறோம். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக எங்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி எம்எல்ஏ அவர்களின் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினை அமைத்து 12 கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள்  போன்றவற்றை ஆய்வு செய்ய இருக்கின்றோம். மேலும் இந்த இடத்தை அரசு தேர்வு செய்தது ஏன்? இந்த இடத்தினை தேர்வு செய்ததால், இப்பகுதி மக்களுக்கு அரசு செய்யப்போவது என்ன? போன்றவற்றை அரசிடமும் நாங்கள் பேசி தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.



 

என்ன செய்யப் போகிறார்கள்..

 

தற்பொழுது வரை அறிவிப்பு அறிவிப்பாக மட்டும் தான் வந்திருக்கிறது. இதனை எப்படி செய்யப் போகிறார்கள்? அரசே செய்யப் போகிறதா? அல்லது தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து செய்ய போகிறார்களா? என்பது தெரியவில்லை. அதேபோல ஏன் இந்த பகுதியை தேர்வு செய்தார்கள் என்பதும் தெரியவில்லை? அதேபோல காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து அடுத்தடுத்து நீர்நிலைகளில் நீர் கொண்டு வந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையிலான அந்த  திட்டமும் இந்த பகுதியில் செயல்பாட்டில் இருக்கிறது. அதனை என்ன செய்ய போகிறார்கள்?. அதேபோல இங்கே நிலத்தை எடுத்தால், இங்கே வசிக்கும் மக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரம் என்ன? வேலைவாய்ப்பு என்ன? அவர்களின் இருப்பிடம் எங்கே? போன்ற பல கேள்விகள் இருக்கிறது. ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகளை தெரிந்து கொள்ள நாம் அரசிடம் சென்று பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. 

 

வளர்ச்சி என்பது தேவைதான்

 

வளர்ச்சி என்பது தேவைதான். அதே சமயம் விவசாயத்தை அழித்து தான், வளர்ச்சியை கொண்டு வரவேண்டும் என்பதை நாங்கள் கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம். வேளாண்துறையும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் உண்மையான வளர்ச்சி. விவசாயத்தை அழித்து கட்டுமானத்தை கொண்டு வருவது தான் வளர்ச்சி என அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது வளர்ச்சியில்லை. வளர்ச்சி என்பது கட்டுமானங்களும் வளர வேண்டும். அதே சமயம் விவசாயமும் வளர வேண்டும். 



 

சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், நீர் நிலைகளை காத்து, நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்து, விவசாயத்தை செழிக்க வைத்துக்கொண்டே, வளர்ச்சிக்கான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் நாம் நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்து, நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். உலகம் எங்கும் பருவநிலை மாற்றம் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

 

250 நீர் நிலைகள் மூடிவிட்டு

 

உதாரணமாக நம் சென்னையை எடுத்துக்கொண்டால், சென்னையில் இருந்த 250 நீர் நிலைகளை மூடிவிட்டு, கட்டுமானங்களாக உருவாகியிருக்கிறோம். இன்று வீராணம் ஏரியிலிருந்தும், கிருஷ்ணா நதியில் இருந்தும்  குடிநீருக்கான தேவையை நாம் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். அதேபோல பிற்காலத்தில் தமிழகம் முழுவதும் இது போன்ற சூழல் ஏற்படும். அதனால் நீர் நிலைகள் பாதிக்கப்படாமல், விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து, அதே சமயம் வளர்ச்சிக்கான திட்டங்களையும் நாம் நிறைவேற்ற வேண்டும். 



 

புதிய விமான நிலையம் ஆனது செயல்பாட்டிற்கு

 

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது நிச்சயமாக தேவை. அது தொடர்பாக நானே பல அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஆனது, 2 கோடியே 10 லட்சம் பயனாளிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஐந்து வருடத்தில் மூன்றரை கோடி பயனாளிகள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போதுமானது இல்லை. இன்னும் 10 வருடங்களில் 10 கோடி பயனாளிகள் பயனளிக்க பயன்படும் வகையில் புதிய விமான நிலையம் ஆனது செயல்பாட்டிற்கு வந்தால் தான் நாம் எதிர்காலத்தில் சமாளிக்க முடியும்.  சென்னையிலேயே உப்பளம் போன்று, பல்வேறு பகுதிகளில் அரசு நிலங்களே இருக்கின்றன. அங்கெல்லாம் தேர்வு செய்யாமல் இந்த இடத்தை ஏன் தேர்வு செய்தார்கள் என்பது குறித்து எங்கள் குழு ஆய்வு செய்த பிறகு தான் தெரிய வரும். முதல் கட்டமாக பாமக தரப்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவானது, இங்கேயும் ஆய்வு செய்து, இதற்காக பரிந்துரைக்கப்பட்ட மற்ற மூன்று இடங்களிலும் ஆய்வு செய்து, அங்கெல்லாம் தேர்வு செய்யாமல் இங்கே ஏன் தேர்வு செய்தார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அரசிடம் கலந்து ஆலோசித்து, எங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கையை, எங்களுடைய முடிவை நாங்கள் அறிவிக்க இருக்கிறோம்.
  

 

என்எல்சி 

 

கடலூர் மாவட்டத்தில் இருக்கும் என்எல்சியால் அந்த மாவட்ட மக்களுக்கு பயனில்லை. அங்கு நிலம் கொடுத்த மக்களுக்கும் பயனில்லை. நிலத்தடி நீரை உறிந்து, அந்த மாவட்டத்தினுடைய வேளாண்மையை அழித்து, பாலைவனம் ஆக்கிவிட்டார்கள். அங்கே நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை இல்லை, தமிழர்களுக்கும் வேலை இல்லை. ஆனாலும் எந்த அரசு வந்தாலும் நிலம் ஆக்கிரமிப்பு செய்து அவர்களுக்கு ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு தராத ஒரு நிறுவனம் தேவையே இல்லை. வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் கடலூர் மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தை அழிக்கிறார்கள். நீர் நீர் ஆதாரங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 



 

நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை

 

மேலும், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் ஹூண்டாய் நிறுவனத்திற்காக 3000 ஏக்கருக்கு நிலங்கள் கையக்கப்படுத்தப்பட்டன. நிலம் கொடுத்தவர்களுக்கு இன்று வரை உரிய இழப்பீடும்  கிடைக்கவில்லை. அவர்களுக்கான வேலையும் கிடைக்கவில்லை. அதேபோல ஒரகடம், சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் சிப்காட் அமைத்தார்கள். அந்த காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கே வேலை கிடைக்கவில்லை.

 

பல மாடல்கள் உள்ளன..

 

வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் பல மாடல்கள் முண்ணுதாரணமாக இருக்கின்றன. அமராவதி மாடல் போல, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் பல மாடல்கள் இருக்கின்றன. ஆந்திர பிரதேசத்தின் தலைநகர் அமராவதி அமைப்பதற்காக 70,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தினார்கள். உதாரணமாக அங்கே ஒரு விவசாயிடமிருந்து குறிப்பிட்ட நிலங்களை கைப்பற்றினால், அதில் ஒரு பகுதியை கட்டுமானங்களை எல்லாம் உருவாக்கி அதில் கிடைக்கும் பயனை அந்த நில உரிமையாளருக்கு கிடைக்கும் படியாக செய்திருக்கிறார்கள். அதேபோல 10% பங்குகளை நிலம் கொடுத்த மக்களுக்கு கிடைக்கும் படி செய்திருக்கிறார்கள்.  



 

அதேபோல கனடா நாட்டில் வளர்ச்சி திட்டங்களுக்காக நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு,  20% பங்குகளை ஒதுக்குகிறார்கள். பிரேசில், கொலம்பியாவில் 50% நிலம் கொடுத்தவருக்கும் 50% அரசுக்கும் என கொடுக்கிறார்கள். அதேபோல கிடைக்கக்கூடிய லாபத்தில் மாத மாதம் ஒரு தொகையினை நிலம் கொடுத்தவர்களுடைய நேரடி வங்கி கணக்கில் செலுத்துவதற்கான திட்டங்களையும் வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் நிலம் கொடுத்தவர்களின் வாழ்வாதாரம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை சமாளித்து அடுத்த கட்டத்தை நோக்கி அவர்கள் மேலே செல்வார்கள். அதாவது நிலத்திற்கான இழப்பீடைத் தாண்டி, லாபத்தில் ஒரு பங்கு கிடைத்தால் வளர்ச்சி திட்டமும் நன்றாக இருக்கும். நிலம் கொடுத்தவர்களும் நன்றாக இருப்பார்கள். எதிர்கால திட்டங்களுக்கு நிலமும் கிடைக்கும். அரியானா மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு எந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் நில உரிமையாளர்களுக்கு அதில் 20% பங்கு உண்டு என்ற ஒரு திட்டம் இருக்கிறது. 

 

சுங்கச்சாவடி   

 

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூட 15 வருடங்களாக சுங்கச்சாவடியில் வசூல் செய்து வருகிறார்கள். நிலம் கொடுத்தவர்களுக்கு மாத மாதம் ஒரு ஏக்கருக்கு இவ்வளவு தொகை என்று அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்திக் கொண்டிருந்தால், அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கும். விலைவாசி உயர்வு அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதித்துவிட்டது. விவசாயமும் இல்லாமல், அவர்கள் எங்கே போவார்கள். அரசு மாத மாதம் லாப பகிர்வு போன்ற சீர்திருத்தங்களை பற்றி சிந்திக்க வேண்டும். அப்பொழுது தான் திட்டமும் வெற்றிகரமாக நிறைவடையும். நிலம் கொடுத்தவர்களும் மகிழ்ச்சியாக வாழ முடியும். நிலம் எடுப்பதில் தமிழக அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது" என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.