திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த புதூர்செக்கடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி வயது (48). இவரது மனைவி ராணி வயது (43). இவர்களுக்கு ராஜபாண்டி வயது (24), சிவா வயது (22) என்ற 2 மகன்கள், பரணி வயது (21) என்ற மகள் உள்ளனர். ராணி வெளிநாட்டில் தங்கி வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வருகிறார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் பழனியின் தாய் உடல்நிலை குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் இறுதிச் சடங்கிற்கு சொந்த கிராமத்துக்கு வந்த ராணி இங்கேயே தங்கி விட்டார். இந்த நிலையில் இவர்களது மகள் பரணி புதுரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த வாலிபருக்கு நேற்று முன்தினம் பழனி மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் அதே கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் மகள் காதல் திருமணம் செய்து கொள்வது தாய் ராணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மகளின் திருமணத்திற்கு கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். 


 




இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியில் ராணியின் அக்கா வசித்து வருகிறார். அவரது வீட்டில் நடைபெற உள்ள விசேஷத்திற்கு தேவையான பொருட்களை தானிப்பாடியில் உள்ள மளிகைகடைகளில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு ராணி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனைக்கண்ட பழனி மகள் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் உனது அக்கா வீட்டு விசேஷத்திற்கு மட்டும் செல்கிறாயா? எனக் கோபத்துடன் கேள்வி கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பழனி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராணியின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வெட்டப்பட்ட ராணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்நிலையில் வெளியே சென்றிருந்த ராணியின் மகன் சிவா வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் உள்ளே கட்டில் மீது தாய் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார் . இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் உடனடியாக தானிப்பாடி காவல்நிலைத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி, தண்டராம்பட்டு ஆய்வாளர் தனலட்சுமி, துணை ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மகள் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாத மனைவியை கணவர் வெட்டி கொலை செய்தாரா?அல்லது வேறு ஏதாவது காரணங்களா? என போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது