ஓணம் பண்டிகையை கேரள மாநிலத்தவர், தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, பெருமளவு விமானங்களில், கேரளா செல்வதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து, திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதோடு, டிக்கெட் கட்டணமும், ராக்கெட் வேகத்தில், பல மடங்கு உயர்ந்துள்ளது.

 

ஓணம் பண்டிகை

 

கேரள மாநிலத்தவர் அனைவராலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை. இந்தப் பண்டிகையை, வெளி இடங்களில்  வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சொந்த ஊரான கேரள மாநிலம் சென்று, குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு கொண்டாடுவார்கள். இதனால் ஓணம் பண்டிகையை ஒட்டி, கேரளாவுக்கு செல்லும் பஸ், ரயில், விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழியும்.

 

பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது

 

இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வரும் 29 ஆம் தேதி, செவ்வாய் அன்று, கேரள மாநிலத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதை அடுத்து சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், பெருமளவு விமானங்களில், கேரளாவுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதை அடுத்து விமான கட்டணங்களும் பல மடங்கு, ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளன.

 

பல மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளது

 

சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான விமான கட்டணம் ரூ.3,225. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.10,945-- ரூ.19,089.

 

சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,962. தற்போதைய கட்டணம் ரூ.6361--ரூ.10,243.

 

சென்னை-கோழிக்கோடு, வழக்கமான  கட்டணம் ரூ.3,148. தற்போதைய கட்டணம் ரூ.5,914--ரூ.21,228.

 

சென்னை--கண்ணூர் வழக்கமான  கட்டணம் ரூ.3,351. தற்போதைய கட்டணம் ரூ.7,292--ரூ.13,814.

 

இவ்வாறு பல மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளது. ஆனாலும் பயணிகள் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணிக்கின்றனர். மேலும் சிறப்பு பஸ்கள், ரயில்கள் தமிழ்நாட்டில் இருந்து ஓணம் பண்டிகைக்காக, கேரளாவுக்கு இயக்கப்படுவது போல், சென்னையில் இருந்து கேரள மாநிலத்திற்கு கூடுதல் சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.