இந்தியாவின் முதல் மின்சார வாகன அனுபவ மையத்தை மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் சென்னையில் அமைத்துள்ளது. மார்ச் 2023க்குள் நாடு முழுவதும் இதுபோன்ற 200 மையங்கள் அமைக்க ஓலா திட்டமிட்டு வருகிறது.


திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் முதல் அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


மின்சார வாகனங்களில் ஆர்வமுள்ளவர்கள் அனுபவ மையத்திற்கு சென்று சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். ஓலா S1 மற்றும் S1 Pro மின்சார ஸ்கூட்டர்களில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஓலா நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அலுவலர் அன்ஷுல் கண்டேல்வால் வெளியிட்ட அறிக்கையில், "ஓலா அனுபவ மையங்கள், எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு சிறப்பாக எடுத்துச் செல்லலாம். அவர்களை மின்சார வாகன பயன்பாட்டிற்கு எப்படி மாற்றலாம் என்பது குறித்து புரிந்து கொள்ள உதவுகிறது.


விழாக்காலம் வரவுள்ளதால், ஓலா S1 Pro வாகனத்தை வாங்குவதற்கு 10,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். மிகவும் மேம்பட்ட ஸ்கூட்டர்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஓலா S1 மற்றும் S1 Pro ஆகியவை மியூசிக் பிளேபேக், நேவிகேஷன், கம்பேனியன் அப்ளிகேஷன் மற்றும் ரிவர்ஸ் மோட் போன்ற மிகவும் பிரபலமான MoveOS அம்சங்களுடன் வருகின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில், ஓலா எலெக்ட்ரிக் கார் 2024ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்றும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை காரில் பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


அப்போது, இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் புரட்சியை கொண்டு வருவது குறித்து பேசிய பாவிஷ் அகர்வால், தமிழ்நாட்டில் உள்ள தங்களின் ஓலா ஃப்யூச்சர் தொழிற்சாலை மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் மையமாக விரிவுபடுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் 10 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


 






இந்தக் கார் இன்னும் தயாரிப்பு நிலையில் தான் உள்ளதாகக்க் கூறப்படும் நிலையில், எதிர்கால தேவைகளை முன்னிறுத்தி கார் தயாரிக்கப்படுவதாகவும், சிறிய ஹேட்ச்பேக் வகையைப் போன்று இந்தக் கார் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓலா எலெக்ரிக் கார் குறித்து கடந்த சில மாதங்களாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், பாவிஷ் அகர்வால், ”ஆகஸ்ட் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு உங்களை சந்திக்கிறேன்” என சஸ்பென்ஸ் வைத்து ட்வீட் செய்திருந்தார்.