திருவண்ணாமலை நகராட்சியில் நகர காவல்நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் அண்ணா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சுடுகாடின் அருகே சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் வாலிபர் திடீரென அங்கிருந்து தப்பித்து ஓடினார். அதன் பிறகு காவல்துறையினர் வாலிபரை விரட்டி பிடித்து நகர காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் வாலிபரை காவல்துறையினர் சோதனை செய்தபோது அவரிடம் சில மாத்திரைகள் இருந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாத்திரைகள் வலி நிவாரண மாத்திரைகள் என்பதும் அதை வைத்து போதைக்காக பயன்படுத்தலாம் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் தேவனூர் கிராமத்தை சேர்ந்த சப்தகிரி வயது ( 20) என்பதும், அந்த மாத்திரைகளை அவர் போதைக்காக பயன்படுத்தி உள்ளார் என்பதும் தெரிய வந்தது. பின்னர் வாலிபர் சப்தகிரியை காவல்துறையினர் கைது செய்தனர்.


 




 


இதுகுறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் கூறியதாவது:


போதைக்காக மாத்திரை விற்பனை செய்து கைது செய்யப்பட்ட சப்தகிரி திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் வாலிபர் வலி நிவாரணத்திற்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியுள்ளார். மேலும் வாலிபர் அந்த மாத்திரையை விற்பனையும் செய்துள்ளார். இந்த வகை மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது. கஞ்சா பயன்படுத்தி வந்த வாலிபர் தற்போது கஞ்சா கிடைக்காததால் அதற்கு மாற்றாக இந்த மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.


அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் ஆகியோர் உத்தரவின் பேரில் மருந்தக ஆய்வாளர் கோகிலா மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மருந்தகத்தில் சோதனை செய்தனர்.




 


அந்த சோதனையில் அதேபோன்று மேலும் 2 மாத்திரை அட்டைகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகையான மாத்திரைகள் மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் இது போன்ற மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். திருவண்ணாமலை நகர்புறங்களில் உள்ள ஒரு சில மருந்தகங்களில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் மருந்தகங்களின் உரிமையாளர்களை அழைத்து சரியான முறையில் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.