ஆண்டுதோறும் இந்து அமைப்பினர் சார்பில் நடைபெற்று வந்த விநாயகர் சதுர்த்தி(vinayagar chathurthi) விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில் மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் வழிபாடு நடத்திய, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல் மற்றும் ஆறு, குளங்களில் கரைப்பது வழக்கமாக இருந்து வந்தது.




இதனிடையே, கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் எனக் கூறி வருகின்றனர். அதேவேளையில், விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் நாட்கள் இருப்பதால்,  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். 



காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  தமிழ்நாட்டில் தற்போது வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த்தெற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவினை பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் 15.09.2021 காலை 06.00 மணி வரை நீட்டித்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது.



 

எனவே, விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது. தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களில் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


இந்த விழாவிற்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தவறாது முகக்கவசம் அணிவதோடு அவ்விடங்களில் பொருட்கள் வாங்க நிற்கும்போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் மேற்க்கண்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி காஞ்சிபுரம் மாவட்டத்தை கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X