பொங்கலுக்கு வேட்டி - சேலை வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்ற பழனிசாமியின் அறிவிப்புக்கு அமைச்சர் ஆர். காந்தி விளக்கமளித்துள்ளார்.


பொங்கலுக்கு வேட்டி சேலைகள் வழக்கம் போல் வழங்கப்படும் என்றும், நாளிதழ்களைகூட பார்க்காமல் எடப்பாடி பழனிசாமி வெற்று அறிக்கை வெளியிடுகிறார் என்றும் கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி எனக் கடுமையாக சாடியுள்ளார்.






ஆர். காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் என்று எடப்பாடி பழனிசாமி ஓர் அர்த்தமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


முழுவீச்சில் வேட்டி- சேலை வழங்கும் பணி


தமிழ்நாடு முதலமைச்சர் 19.11.2022 அன்று தலைமைச் செயலகத்தில் பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகளின் தரத்தினையும் சேலைகளின் வண்ணங்களையும் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.


இந்த ஆய்வுக் கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான நான் உள்பட மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு பொங்கலுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 


இந்த ஆய்வுக் கூட்டம் குறித்த செய்திகள் அனைத்துப் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளிவந்தது. இதைக்கூட பார்க்காமல் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


1.79 கோடி பேருக்கு வேட்டி - சேலை


ஒரு கோடியே 79 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் முழுமையாக பொங்கல் திருநாளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழக்கம்போல வழங்கப்படும் என்பதை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்த கொள்கை அளவிலான ஆணைகள் வழங்கியும் மற்றும் ஏற்கனவே அதற்காக ரூபாய் 487.92 கோடி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.


இத்திட்டத்திற்குத் தேவையான வேட்டி, சேலைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளுடன் தரமான நூல்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதோடு திட்டத்தினை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குத்  தெரிவித்துக்கொள்கிறேன்.


’மனம்போன போக்கில் பத்திரிகை பார்க்காமல் அறிக்கை’


இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சரான தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டை நம்பர் 1 இடத்திற்கு எடுத்துச் சென்று வாகை சூடியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் இடைச்செருகலாக வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பற்றி குறை சொல்வதற்கு ஏதும் இல்லாமல் ஏதோ ஒரு அறிக்கையை மனம்போன போக்கில் வெளியிட்டுள்ளார்.


இனிமேலாவது பத்திரிகைகளையும் ஊடகங்களையும் பார்த்து அரசு செய்து வரும் சாதனைகளை உணர்ந்து அவர் அறிக்கை வெளியிட வேண்டும்.


இடைக்கால எடப்பாடி பழனிசாமி குழப்பமான அறிக்கைகளை வெளியிட்டு மக்களைக் குழப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.