Chennai Metro Rail: சென்னையில் நவம்பர் 27ஆம்  தேதி முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மெட்ரோ ரயில்:


சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. 


அதேபோல் சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. குறிப்பாக, பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் அறிமுகப்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட, பேடிஎம், போன்பே ஆப்பில் டிக்கெட் எடுக்கும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.


7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம்






சென்னையில் நவம்பர் 27ஆம்  தேதி முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அதிகரித்து வரும் மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 27.11.2023 (திங்கட்கிழமை) முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


5 ரூபாயில் பயணம் செய்யலாம்:


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு, டிசம்பர் 3ஆம் தேதி மட்டும்  மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. க்கியூஆர் பயணசீட்டுகளில் (Static QR; Paytm; Whatsapp and PhonePe) ஒற்றைப் பயண இ-க்யூஆர் பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்குகிறது.  டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேக கட்டண சலுகையை மெட்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது.