முறிந்து விழுந்த 300 மரங்கள்:


சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக 300 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக மாநகராட்சி மேயர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாள்களாக  தமிழ்நாட்டு மக்களை ஆட்டுவித்து வந்த மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணி அளவில் கரையைக் கடந்து தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.


மாமல்லபுரம் அருகில் உள்ள கடற்கரைகளில் நேற்று இரவு 9.30 மற்றும் இன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் புயலாக  அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசி புயல் கரையைக் கடந்தது.  இதன் எதிரொலியாக சூறைக்காற்றுடன் மழை விடிய விடிய கொட்டித் தீர்த்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.


படகுகள் சேதம்:


அதன்படி சென்னையில் 300 மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில், முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மேலும் கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் சென்னை, காசிமேட்டில் 150 படகுகள் சேதமாகின. 3 படகுகள் கடலில் மூழ்கின.


அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ மழையும், சென்னை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி பகுதிகளில் தலா 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ள நிலையில், மாலை வரை கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிமீ வரையிலும் வீச வாய்ப்புள்ளதாகவும், மாலைக்குப் பிறகு 85 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கரையை கடந்த மாண்டஸ்:


வட தமிழகக் கடலோரப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து இன்று நண்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 காட்டுப்பாக்கம் 16 செ.மீ, வில்லிவாக்கம் 6 செ.மீ, புழல் 10 செ.மீ, பூந்தமல்லி 10 செ.மீ, சத்தியபாமா பல்கலைக்கழகம் 7 செ.மீ, பள்ளிக்கரணை 7 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழைப்பொழிவு பெய்துள்ளது என்று கூறினார். புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 70 முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசி உள்ளது எனவும் வட உள்மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆயுவு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


அடுத்த மூன்று மணி நேரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், பெரம்பலூர்,  உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.