வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு 20 செ.மீ. அளவில் பதிவாகிய மழை கடந்த நான்கு தினங்களாக பரவலாக பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால், சென்னை மாநகரின் பல பகுதிகளிலும் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதுடன் சூறைக்காற்றும் வீசி வருகிறது.




சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் பணியாற்றி வருபவர்  உதயா. இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையிலே பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த உதயாவிற்கு, சென்னையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் உடல்நலம் மேலும் மோசமாகியுள்ளது. இந்த நிலையில், கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட உதயா இன்று மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையின் மீதே மயங்கி விழுந்துள்ளார்.


இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தகவலறிந்த டி.பி.சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு விரைந்தார். அங்கு உதயாவை சுற்றிலும் முறிந்து விழுந்திருந்த மரங்களின் கிளைகளை அகற்றி, உதயாவை மீட்டார். முழுவதும் மயங்கிக்கிடந்த உதயாவை திரைப்படங்களில் காட்டுவது போல தனது தோளிலே தூக்கிக்கொண்டு கீழ்ப்பாக்கம் கல்லறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர், உதயாவை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.




கல்லறையில் மயங்கிக்கிடந்த கல்லறை ஊழியரை மீட்டு, தோளில் தூக்கிக்கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுப்பிவைத்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முன்னதாக, வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் இன்று நண்பகல் வரை சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை மாமல்லபுரம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளதால், மழையின் தீவிரம் இன்று முழுவதும் சென்னையில் அதிகளவிலே காணப்பட உள்ளது.


இதனால், சென்னையில் உள்ள சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை சரிசெய்யும் பணியில் சென்னை மாநகராட்சி பணியாளர்களுடன், தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண