Kilambakkam Bus Terminus (கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்) 


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.  சுமார் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



மழையால் ஏற்பட்ட சிக்கல் ( Rain Near Kilambakkam Bus Terminus ) 
 


இந்த நிலையில்,  கனமழையின் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில், மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 


மீண்டும் தொடரும் பிரச்சனை ( kilambakkam bus terminus water logging Issue ) 


இந்த நிலையில் செங்கல்பட் மாவட்டத்திற்கு உட்பட்ட  பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி , ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் பல்வேறு இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடின.  குறிப்பாக சென்னை திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் அடுத்த அமைந்துள்ள கிளாம்பாக்கம் பகுதியில், புதியதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் முன்பு தண்ணீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.



அச்சத்தில் வாகன ஓட்டிகள்


சாலையில் சென்ற கார்களில் முழுமையாக தண்ணீர் சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகன வட்டிகள் அது தனித்தீவு போன்று காட்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர். இதன் காரணமாக சுமார், நள்ளிரவில் மூன்று மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிற நாட்களில் தேங்கி நின்ற மழை நீரைவிட, நேற்று நள்ளிரவு பெய்த கனமழையின்பொழுது , கிளம்பாக்கம் பேருந்து முனைய வாயிலில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


 சிதிலமடைந்த கல்வெட்டுக்கள்


இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது:  ”கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைந்த இடம் சற்று உயர்வாகவும், அதே போன்று சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மிக தாழ்வாகவும் இருப்பதால் ,மழை பெய்யும் போது சிறிது நேரத்திலேயே அங்கு தண்ணீர் தேங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் நீர் அங்கு தேங்கி வெள்ளமாக காட்சியளிக்கிறது.  சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட  4 கல்வெட்டுகளும்  சேதம் அடைந்துள்ளது.  இதன் காரணமாக அதன் வழியாகவும்  தண்ணீர் போக முடியாத சூழல் ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். 


 ரூ. 17 கோடி ரூபாயில் வடிகால் பணிகள் அமைக்க திட்டம்


இதனால் அப்பகுதியில் புதிய கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை 17 கோடி ரூபாயில்  செயல்பட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கால்வாய் அமைத்தால் மழை நீர் தேங்காமல்  நேரடியாக தண்ணீர் அடையாறு ஆற்றுப்படுகைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேபோன்று, பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மழை நீர் சுமார் 180 அடி நீளம் உள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து, கிளாம்பாக்கம் ஏரி மற்றும் வண்டலூர் ஏரி ஆகியவற்றுக்கு செல்லும் வழியில் மழை வடிநீர் தாழ்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.



 
45 நாட்களுக்குள் முடிக்க திட்டம்


வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பாகவே,  முக்கிய பணிகளை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.  இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை அனுமதி பெற்று 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.