தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால்,  இரண்டாவது சர்வதேச புதிய விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை  பரிந்துரை செய்தனர். 



 

அதில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாம்புரம் கிராமத்தை மையப்பகுதியாக வைத்து சர்வதேச புதிய விமான நிலைய அமைக்க  12 கிராமங்களில் சுமார் 5000 விளை நிலங்கள்  எடுப்பு நடைபெற போவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சுங்குவார்சத்திரம் பகுதி அடுத்த ஏகனாபுரம் , அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிய வருகிறது.



 

அதனால் அந்த கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தை முன்வைத்து விமான நிலையம் வருவதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். மேலும் இந்த  கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது என கூறி  எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் நிலப் பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்து விட்டு, தமிழக அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் செய்து வருகின்றனர்.



 

அதனை ஒட்டி இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாபுரம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்து ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் உட்பட 200 க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மனதாக முடிவு எடுத்து தீர்மான புத்தகத்தில்  கையொப்பம் இட்டனர். இதேபோல் இந்த பகுதிகளில் உள்ள 12 கிராமங்களிலும் விமான நிலையம் வருவதை எதிர்த்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற போவதாக தகவல் பரவியது. அதனால் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஏகனாம்புரம் பகுதியில் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.



 

காஞ்சிபுரம் சுதந்திர தின விழா

 

 

76வது சுதந்திர தின விழா அமுதப்பெருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்க திடலில்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி  தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மேலும்  பல்வேறு துறைகளின் கீழ் 52 பயனாளிகளுக்கு 1 கோடியே,19 லட்சத்து 92 ஆயிரத்து 239 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாட்டின் 76வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு  இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி  காவல்துறையினரின் அணிவகுப்பு  மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் மூவர்ண பலூன்களையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் பறக்கவிட்டார்.

 

அதனைதொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 52 பயனாளிகளுக்கு 1 கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாரட்டினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்தியபிரியா,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரையா, திட்ட அலுவலர் ஸ்ரீதேவி ,  காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.