காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென மழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 


காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் முடிவடைந்தாலும், கடந்த சில தினங்களாக  வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வெப்பம் காரணமாக பொதுமக்களும் வாகனம் ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.




 

திடீரென மழை

 

காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே  வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல்,  ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், பாலு செட்டி சத்திரம், தாமல், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது. மாலை வேளையில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.




 

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால்,  விஷார் பகுதியில்  காத்திருந்த நெல் மூட்டைகள்  மழையில் நனைந்து விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

விஷார் பகுதியில் கடந்த பருவத்தில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட குறிப்பிட்டதக்கது. இக்கிராமத்தை சுற்றி உள்ள பெரும்பாக்கம் ,  நரப்பாக்கம், விப்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இந்த மையத்தின் மூலம் பயன்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இதே பகுதியில் மேல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என மக்கள் தற்போது வரை காத்திருக்கின்றனர். கடந்த ஒரு வாரங்களாக அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்களை இங்கு களத்தில் முன்பதிவுக்காக எடுத்து வந்து காத்திருந்து உள்ளனர். இந்நிலையில் மாலை திடீரென காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கருமேகம் சூழ்ந்து மழை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது இந்த பகுதியில் கன மழை பெய்தது.


 

இதைக் கண்ட விவசாயிகள் உடனடியாக தங்கள் நெல் மீது தார்ப்பாயும் மூலம் பாதுகாக்கும்  பணிகளை மேற்கொண்டனர். இதனால் இவர்களுக்கு இழப்பு ஏற்படும் முன் இப்பகுதியில் விரைவாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.