காஞ்சிபுரம் மாவட்டம்  காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புட்குழி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த சுகுணா. இந்நிலையில் திருப்புட்குழி பகுதியை சேர்ந்த சிலர் ஊராட்சி மன்ற தலைவரை தரக்குறைவாக பேசிய நிலையில் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில், சுகுணா புகார் அளித்ததின் பேரில் எஸ்சி எஸ்டி சட்டப் படி மற்றும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுநாள் வரை குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை என புகார் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.



 

இந்நிலையில் 74 ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில், தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் தேசியக் கொடி ஏற்ற சென்றுள்ளார். அங்கு  கொடியேற்ற சென்ற ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவை, தரக்குறைவாக பேசிய வழக்கில் சிக்கி உள்ள நபர்களான பாலச்சந்தர், செல்வம், ஆகியோர் கொடியேற்ற விடாமல் தடுத்தது மீண்டும் தரக்குறைவாக கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், பேசி ஊராட்சி மன்ற தலைவரை தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்து திருப்பி அனுப்பி அனுப்பியதாக ஊராட்சி மன்ற தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.



 

இந்நிலையில், ஏற்கனவே அவதூறாக பேசி தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில், இன்று மீண்டும் தேசியக்கொடி ஏற்ற வந்த இடத்தில் மீண்டும் அச்சுறுத்தி தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா, பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஊராட்சி மன்ற தலைவரை பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்தாக காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் தீர்ப்பு திருப்புட்குழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊராட்சி மன்ற தலைவரின் புகாரின் பேரில் பாலு செட்டி சத்திரம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் அதே பகுதியில் உள்ள, அரசு ஆரம்பப் பள்ளியில் கொடி ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 



 

ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்றாமல் தடுத்து விவகாரம் தொடர்பாக முதன்மை மாவட்ட கல்வித்துறை அலுவலரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, அரசு தரப்பில் இருந்து பள்ளிகளில் யார் கொடி ஏற்ற வேண்டும் என உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை, ஆனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்றுதலைத் தொடர்ந்து அவர்கள் மூலமாகவே கொடியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.