கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கோவில்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கோவில்கள் திறக்க பட்டாலும் கோவில்களில் மக்கள் அதிகம் கூடும் திருவிழா உள்ளிட்டவற்றுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



ஆடி மாதங்கள் அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறும்பொழுது, பொது மக்கள் மற்றும் பக்தர்கள் அதிக அளவு கூடாமல் தடுப்பதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடத்தவோ, சுவாமி சிலையுடன் ஊா்வலங்கள் நடத்தவோ அனுமதி இல்லை என ஆட்சியா் மா. ஆா்த்தி  தெரிவித்துள்ளார்



இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மேலும் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது குறைந்தபோதும், ஆடி மாதம் தொடங்கி உள்ளதால் அம்மன் மற்றும் முருகன் கோயிலில், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். இல்லாவிட்டால், 3-வது அலை ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடும். எனவே தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, கோயில்களில் வழிபாடு செய்ய தடை ஏதும் இல்லை. ஆனால் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்குகள் மேற்கொள்ள அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.



 

கோயில்களில் அதிக கூட்டம் கூடாமல் தரிசனம் மட்டும் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் தவறுபவர்கள் மீது அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யப்படும். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முக்கியமாக கோயில்களில் திருவிழாக்கள், சுவாமி சிலை ஊா்வலங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவில்களில் கூழ் வார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார், மேலும் கோயில்களில் நடக்கும் திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூடக்கூடாது. கொரோனா தொற்றானது ஒருவரிடமிருந்து மற்றவா்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மை உடையது என்பதால் இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவித்தார்.



 

கோவில் திருவிழாக்கள் நடத்தப்படாது என்பதைக் கேள்விப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சோகம் அடைந்துள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்போரூர்  கந்தசாமிமுருகன் கோவில் குளத்தில் குளிப்பதற்கும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.