தமிழகம் முழுவதும் புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசானது அறிவித்து இதற்கென 5கோடி ரூபாய் நிதி ஒதுக்கிட்டு ஒவ்வொரு மாவட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கென 12 இலட்சம் ஒதுக்கப்பட்டு புத்தக திருவிழாவானது கடந்த 23-ஆம் தேதி துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கத்தில் 120 ஸ்டால்களுடன் கூடிய இந்த புத்தக கண்காட்சியில் பலரும் பனவிரும்பக்கூடிய புத்தகங்கள் முதல்‌ அரியவகை புத்தகங்களை, பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் வரை 5000 தலைப்புகளில் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சியகப்படுத்தப்பட்டுள்ளன.



 

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் முதன்முறையாக நடத்தப்பட்டு வரும் இந்த புத்தக திருவிழாவில் ஆரம்ப நாள் முதலே மக்கள் வர தொடங்கிய நிலையில் விடுமுறை நாள் ஞாயிற்றுக்கிழமையொட்டி ஏராளமான உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு கிராமபுற பகுதிகளிலிருந்தும் குடும்பம் குடும்பமாய், ஒரு சிலர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்து இந்த புத்தக கண்காட்சி உண்மையிலேயே காஞ்சிபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களை போன்று காட்சியளித்து களைகட்டியது.



இதில் ஏராளமானோர் அறிவுசார் புத்தகங்களையும், அரிய வகை நூல்களையும், நகைச்சுவை கதைகள், ஆன்மீக புத்தகங்கள், தங்களது குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி தங்களது கைகளில் அடுக்கி எடுத்து சென்றனர். இதில் குறிப்பாக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. எம்.பி.எழிலரசன் மக்களோடு மக்களாய் வந்திருந்து தனக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றார். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என உட்பட பலரும் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்து தங்களது தேவையான நூல்கள் வாங்கி பயன்பெற்றனர். ஜனவரி 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, இந்த புத்தக திருவிழாவில், நாளுக்கு நாள் பொதுமக்களின் வருகை அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.



 

 

கலந்து கொள்பவர்கள் யார் ?

 

 27 ஆம் தேதி விஜய் டிவி ஈரோடு . மகேஷ், 28 ஆம் தேதி முனைவர் கு. ஞானசம்பந்தம் ( பட்டிமன்றம்) , பாரதி பாஸ்கர், 29ஆம் தேதி சுகி. சிவம், 30 ஆம் தேதி பர்வீன் சுல்தானா மற்றும் எழுத்தாளர் கவிப்பித்தன், 31ஆம் தேதி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன்,  ஜனவரி 01 தேதி கு .சிவராமன், ஜனவரி 02 ஆம் தேதி, திண்டுக்கல் ஐ. லியோனி  உள்ளிட்டோர் கலந்துகொண்டு  சிறப்பிக்க உள்ளனர்.



 

சிறப்பம்சங்கள்

 

100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன, தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,  மக்களை கவரும் வண்ணம் உணவரங்கம், கோளரங்கம் உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தினமும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு அசத்தும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது