சென்னை மாநகராட்சிக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை ரிப்பன் பில்டிங் அருகே உள்ள விக்டோரியா ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.


தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். தொழில் உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்கக் கூடாது. ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே. மாநகராட்சிப் பள்ளிகளை மூடாதே உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி இல்லாத நிலையில் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இயையே தள்ளு முள்ளும், வாக்குவாதமும் ஏற்பட்டது. மேலும், கே.பாலகிருஷ்ணனிடமும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்


அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும். எங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் தயங்க மாட்டோம். கைது செய்து விடுவோம்.. வாகனத்தில் ஏற்றி விடுவோம் என்று சொல்வது நாகரீகமற்ற செயல்.


மக்கள் பிரச்சனைக்காக போராடும் பொழுது தீவிரம் காட்டும் காவல்துறையினர். மற்ற விஷயங்களில் தீவிரம் காட்டினால் நன்றாக இருக்கும் இங்கு யாரும் தீவிரவாதி கிடையாது, கஞ்சா விற்பவர்கள் கிடையாது. எனவே நாங்கள் ஆர்ப்பாட்டத்தை அமைதியாக நடத்தி முடித்தவுடன் நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள். காவல்துறையினரின் போக்கு நல்லதல்ல. காவல்துறை தவறு செய்யும் பொழுது தட்டிக் கேட்க தயங்காதவர்கள் நாங்கள்.


சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தனியாருக்கு கொடுத்து விட்டால் கான்ட்ராக்டர் காரர்களுக்கு தான் லாபம் கிடைக்கும். தூய்மை பணியை தனியார் மயமாக்குவதால் சுகாதாரம் பாதிக்காதா? தனியார் மயமாக்குவதை முழுக்க முழுக்க கைவிட வேண்டும். மின்சார விநியோகம், தூய்மை பணி, குடிநீர் வினியோகம் என


அனைத்தையும் காண்ட்ராக்ட்க்கு விடுகிறீர்கள். ரிப்பன் பில்டிங்கையே காண்ட்ராக்ட்க்கு விட்டு விடுங்கள். மாமன்ற மேயரையும் ஒரு ஒப்பந்த தொழிலாளியாக வைத்து விடுங்கள்


பாஜகவின் தனியார் மயமாக்கும் கொள்கையை சென்னை மாமன்றம் நிறைவேற்ற கூடாது என முதலமைச்சரை வலியுறுத்துகிறோம். நாம் சமூக நீதி பேசி வரும் சூழலில் தனியார் மயமாக்கப்பட்டால் அதில் எப்படி சமூக நீதி இருக்கும்? மாநகராட்சி பள்ளிகளை மூடி மாணவர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடக்கூடாது. எங்கள் கோரிக்கைகளை மாமன்றம் பரிசீலிக்காத பட்சத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம். சென்னையே குலுங்கும் அளவிற்கு போராட்டங்களை நடத்தவோம்.


கே. பாலகிருஷ்ணன் பேட்டி


தூய்மை பணியை தனியார் மையம் ஆக்கப்பட்டதை ண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மாமன்றத்தின் நடவடிக்கை நல்லதல்ல. இந்த முடிவை கைவிடாவிட்டால் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுப்போம்.


கூட்டணியாக இருந்தாலும் மக்கள் பிரச்சனைக்கு போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. தனியார் மயமாக்குவது பாஜகவின் கொள்கை அந்த திசையில் மாமன்றம் செல்ல வேண்டாம் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்றார். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கே.பாலகிருஷ்ணன் உடபட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.