ஆட்சியரகத்தில் கொடியேற்றிய கலெக்டர்

 

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி விட்டு, காவல்துறையினரின் அணிவகுப்பு  மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

 

பின்னர் முவர்ண  பலூனையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மேகன் பறக்கவிட்டார். அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 60 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 28 லட்சம்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் பொன்னி,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 

சுதந்திர தினம் புறக்கணிப்பு

 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ள நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 385 நாட்களாக பல்வேறு வித தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏகனாபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொடியேற்று விழாவிற்கு மாணவ, மாணவிகளை அனுப்பாமல் புறக்கணித்தனர்.

 

விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமம் முழுவதும் தெருக்களில் கருப்பு கொடி தோரணம் கட்டி வீடுகள் தோறும் கருப்பு கொடியை ஏற்றி வைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் தொடர்ந்து ஆறு முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எவ்வித பயணம் ஏற்படவில்லை என கூறி சுதந்திர போராட்டத்தை கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி புறக்கணித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க  எதிர்ப்பை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் போராட்டம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.

 

கொடி ஏற்றியதில் குளறுபடி

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இன்று 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரியின் முதல்வர் சுகுமார் தேசியக்கொடி , ஏற்றிய போது தேசிய கொடி தலைகீழாக இருந்தது. உடனே சுதாரித்துக் கொண்டு கொடியை இறக்கி மீண்டும் சரி செய்து நேராக பறக்க விட்டனர். அதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. 

 

கிராம சபையில் சர்ச்சை

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேண்பாக்கம் கிராமத்தில் , இன்று சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த சரளா குமரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்ற பொழுது ஊராட்சி மன்ற தலைவர் சரளா எந்த ஒரு பணியும் செய்யாமல் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குமரன் தலையிட்டால் பல்வேறு பணிகள் முடங்கி இருப்பதாகவும் அனைத்து வேலையிலும் முறைகேடு நடைபெற்ற இருப்பதாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

 

இந்நிலையில் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரளா குமரனிடம் துணைத் தலைவர் அருள் மற்றும் பொதுமக்கள் வரவு செலவு கணக்கு கேட்கும் என்ற பொழுது சரளாவின் கணவர் குமரன் தலையிட்டு பதில் கூற முடியாது என கூறிவிட்டு ஆக்ரோஷமாக தாக்க முயன்றார். பின் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குமரன் மற்றும் பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் உள்ளே புகுந்து ஊர் மக்களை அனைவரும் அப்புறப்படுத்தி வாக்குவாதத்தை தவித்தனர். முறைகேடு மற்றும் வரவு செலவு கணக்கை கேட்டதால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பொதுமக்களை கடுமையாக வார்த்தையாலும், தள்ளு முள்ளும் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.